கள்ள(சாராய)க்குறிச்சி..துடித்து அடங்கிய 5 உயிர்கள்.! ’அந்த’ அமைச்சர்களை தூக்குங்க..அண்ணாமலை ஆவேசம்
சென்னை: கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஐந்து பேர் கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது எனவும், இந்த விவகாரத்தில் இரு திமுக அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் அருகே கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அந்த பகுதியைச் சேர்ந்த பிரவீன், சுரேஷ், ஜெகதீசன் உள்ளிட்ட சிலர் அங்கு கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.

அவர்களில் 10 பேருக்கு மேல் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில், ஐந்து பேர் உயிர் இழந்தனர். பலர் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்த சம்பவத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மறுத்துள்ளார். உயிரிழந்த அவர்கள் 5 பேருக்கும் வெவ்வேறு உடல்நல பாதிப்பு இருந்துள்ளதாகவும் அதனால்தான் அவர்கள் உயிரிழந்தனர்.. உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஐந்து பேர், கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது எனவும், இந்த விவகாரத்தில் இரு திமுக அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஐந்து பேர், கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பத்து பேருக்கும் மேல், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள் என்று தெரிகிறது. மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் திரு மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் ஐந்து உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் திரு மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் திரு முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications