ஏதோ நடக்குதே.. அண்ணாமலை கூட்டிய பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் திடீர் ரத்து- வருகிறார் பிஎல் சந்தோஷ்!
சென்னை: அதிமுக கூட்டணியை முறித்த நிலையில் சென்னையில் நாளை அண்ணாமலை கூட்டியிருந்த தமிழ்நாடு பாஜக மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக் கூட்டத்தை அண்ணாமலையே ரத்து செய்தாரா? அல்லது டெல்லி மேலிடம் தலையிட்டு ரத்து செய்ய சொன்னதா? என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் இடைவிடாத விமர்சனங்கள், அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுகவை தலைதெறிக்க ஓடவைத்துவிட்டது. தமிழ்நாட்டில் பாஜக சில தொகுதிகளைப் பெறுவதற்கு நம்பிக்கையாக இருந்த அதிமுக, கூட்டணிக்கு முழுக்கு போட்டுவிட்டதை டெல்லி மேலிடத்தால் இன்னமும் நம்ப முடியவில்லை.

டெல்லியில் இருந்து ஓலை: அதிமுகவின் இப்படியான அதீத கோபத்துக்கு காரணமே அண்ணாமலைதான் என்பது வெளிப்படையான ஒன்று. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆய்வு நடத்தி டெல்லிக்கு அறிக்கை அனுப்பினார். இந்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார் அண்ணாமலை.
டெல்லியில் அண்ணாமலை டேரா: தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை, அக்கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்தது தொடர்பாக முரண்பாடான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் டெல்லியில் இதுவரை செய்தியாளர்களிடம் அண்ணாமலை 'தலை' காட்டவில்லை.
இன்றுதான் சந்திப்பா?: டெல்லியில் இன்றுதான் அதிகாரப்பூர்வமாக பாஜக தேசிய தலைவர்களை அண்ணாமலை சந்திக்கக் கூடும் என்கின்றன அக் கட்சி வட்டாரங்கள். இதனால் அண்ணாமலை உடனடியாக சென்னை திரும்பமாட்டார் எனவும் கூறப்படுகிறது.

அண்ணாமலை வருவாரா? மாட்டாரா?: இதனிடையே சென்னையில் மாவட்ட தலைவர்களை உள்ளடக்கிய மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும் என ஏற்கனவே அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால் தற்போது இந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை நாளைய கூட்டத்தில் பங்கேற்பாரா? இல்லையா? என்பது விவாதிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தக்வல்கள் தெரிவிக்கின்றன.
பி.எல்.சந்தோஷ்: இதனிடையே தமிழ்நாட்டுக்கான டெல்லி மேலிட பொறுப்பாளர் பிஎல் சந்தோஷ் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நாளைய கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும் சென்னை வரும் பிஎல் சந்தோஷ், அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து கேட்டடு ஒரு அறிக்கையை டெல்லி மேலிட உத்தரவுப்படி தருவார் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications