இனி வார் ரூம் அரசியல் இருக்க கூடாது.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு நயினார் நாகேந்திரன் வார்னிங்!
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் இனி வார் ரூம் அரசியல் இருக்கக் கூடாது என்று அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை கொடுத்துள்ளார். எக்ஸ் தளத்தில் அண்ணாமலை படத்துடன் இயங்கி வரும் 15 கணக்குகள், அண்ணாமலைக்கு ஆதரவாகவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பதிவிட்டு வருவதாக கூறிய அவர், பாஜகவினரின் சோசியல் மீடியா செயல்பாடுகளை கண்காணிக்க குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கு பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இதன்பின் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்புக்கு வந்தார். அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக வேகமாக வளர்ச்சியடைந்தது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. அதேபோல் தென் மாவட்டங்களில் பாஜகவின் ஆதரவு அதிகரித்தது நாடாளுமன்றத் தேர்தலிலும் தெரிய வந்தது.

அண்ணாமலை வார் ரூம்
இருப்பினும் அண்ணாமலை தலைவராக இருந்த போது, பாஜகவினர் டிஜிட்டலில் தீவிரமாக இருந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜகவின் டிஜிட்டல் அணி என்பதை காட்டிலும், அண்ணாமலை தனக்கென ஒரு வார் ரூம் வைத்து கொண்டு, தனது கருத்துக்கு எதிராக பேசுவோரை சரிமாரியாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனை காயத்ரி ரகுராம், சிடி நிர்மல் குமார் போன்றோர் வெளிப்படையாகவே கூறி இருக்கின்றனர்.
நயினார் நாகேந்திரன் vs அண்ணாமலை
அண்ணாமலையுடன் நெருக்கமாக இருந்த சூர்யா சிவாவே கூறி இருக்கிறார். இதனால் வார் ரூம் பாலிட்டிக்ஸ் என்ற புதிய வார்த்தை பாஜக அரசியல்வாதிகள் மத்தியில் உச்சரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அண்ணாமலை பதவிக்காலம் முடிவடைந்து, பாஜகவின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார்.
கமலாலயத்தில் ஆலோசனை
இன்று கமலாலயத்தில் பாஜகவின் ஊடகப் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து இருக்கிறார். அப்போது, பாஜகவில் இனி வார் ரூம் பாலிட்டிக்ஸ் இருக்கக் கூடாது. இந்த 15 எக்ஸ் தள கணக்குகளும் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு
அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றன. பாஜக நிர்வாகிகள், தொண்டர்களின் சோசியல் மீடியா கணக்குகளை கண்காணிப்பதற்கு புதிதாக ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. Media Empower Network என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குழு பாஜகவினரின் விவாதம், சோசியல் மீடியா பதிவுகள் ஆகியவற்றை கண்காணிக்க உள்ளது.
வார் ரூம் இருக்கக்கூடாது
பாஜகவில் இனி எந்த நபர்களுக்கு ஆதரவாகவும், யாருக்கும் எதிராகவும் பதிவிடக் கூடாது. அதேபோல் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாக பதிவிடுவோர் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரடி வார்னிங்காகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications