குடிசை இல்லா ஊருக்குள்ள வசிக்க போகும் நம்ம புள்ள! கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 1 லட்சம் வீடுகள்
சென்னை: 2025 - 2026 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தமிழக சட்டப் பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில் 8 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டும் இலக்குடன் தொடங்கப்பட்ட கலைஞரின் கனவு இல்லம் (Kalaignar Kanavu Illam) திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் 3,500 கோடி ரூபாய் செலவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று தமிழகத்தின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார்.

நாளை வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
எனவே தேர்தலுக்கு முன்பாக திமுக அரசின் முழு பட்ஜெட் இது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. சொன்னது போல பல முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. எல்லார்க்கும் எல்லாம் என்ற முழக்கத்தோடு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் கூறி தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
குறிப்பாக நிதி அமைச்சரின் முதல் அறிவிப்பு தமிழ் மொழி சார்ந்ததாக இருந்தது. தமிழ் மொழி மற்றும் வரலாற்றை வெளிக்கொணர முக்கிய அறிவிப்புகள் இருந்தது. அந்த வகையில் வேறு 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும், ராமநாதபுரத்தில் நாவாயில் அருங்காட்சியம் அமைக்கப்படும், ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், மேலும் எட்டு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள், உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம் 6500 கிமீ சாலைகள் 2200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்தார். குறிப்பாக சீரமைக்க இயலாத வீடுகளுக்கு பதிலாக சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பையும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் இந்த நிதியாண்டில் சுமார் 3500 கோடி ரூபாய் செலவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும் ஊராகப் பகுதிகளை குடிசைகள் இல்லா நிலையை உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 2021ல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்த நிலையில், அத்திட்டம் கலைஞர் வீடு வழங்கும் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருவது கண்டறியப்பட்டது. குடிசை இல்லாத தமிழ்நாடு இலக்கை அடையும் வகையில் 2030ஆம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications