அத்துமீறும் இலங்கை..சக்திக்கு மீறிய அபராதம்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..மத்திய அரசுக்கு பறந்த கடிதம்
சென்னை : இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திடவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
கடந்த சில நாட்களாகவே ஆழ் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை அவர்களுக்கு மொட்டை அடித்த செய்தி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும், மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுவது தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடித்தத்தில்,"மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 21-9-2024 அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் வசூலிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள், IND-TN-16-MO-3451, IND-TN-16-MO-1544 ஆகிய பதிவெண்களைக் கொண்ட இரண்டு படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகு என மூன்று படகுகளில் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கடந்த 21.09.2024 அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன் பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் போது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது. கைது செய்யப்படும் மீனவர்களிடம், அவர்களது சக்திக்கு மீறிய அபராதங்களை இலங்கை நீதிமன்றங்கள் விதித்து வருகிறது.
மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகள் இதுபோன்று கைது செய்வதைத் தடுத்திட உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications