நாளை சட்டமன்ற கூட்டத்தொடர்.. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆலோசனை
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டின் முதல் வாரத்திலும், அந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். ஆளுநர் உரையுடன் தொடங்கும் கூட்டத்தில் அந்த ஆண்டிற்கான அரசின் திட்டங்கள் இடம்பெறும். 16ஆவது சட்டசபையின் இரண்டாம் கூட்டத்தொடராகவும், 2022 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடராகவும் நாளை தொடங்கும் கூட்டத் தொடர் அமைந்துள்ளது.
தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக சென்னை, கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த காரணத்தால் புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை வழக்கம் போல் சட்டப்பேரவையில் நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது.

கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர்
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி கட்டுப்பாடுகளுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கலைவாணர் அரங்கிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு சட்டப்பேரவை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகின்றனர். புத்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால் மரபுப்படி நாளை சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.

மக்கள் எதிர்பார்ப்பு
அதற்காக நாளை காலை கலைவாணர் அரங்கம் வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் வரவேற்பார்கள். மேலும், இம்முறை கேள்வி நேரம், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதலமைச்சரின் பதிலுரை உள்ளிட்டவை நேரலையாக ஒளிபரப்பப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் உரையில் திமுகவின் தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் அதிகளவில் இடம்பெறவுள்ளதாகவும், கடந்த கூட்டத்தொடரிலேயே திமுக தேர்தல் அறிக்கையில் பலவற்றை அறிவித்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற மற்ற வாக்குறுதிகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்கட்சிகள் திட்டம்
அதே நேரம் எதிர்க்கட்சிகள் தரப்பில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் ரெய்டு நடவடிக்கைகள் குறித்தும், திமுகவின் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் நகைக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித்திகை, பொங்கல் பரிசுத்தொகை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி பிரச்சினை எழுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் சட்டப்பேரவை சபாநாயகர், சட்டப்பேரவை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications