வெயிலுக்கு இதமாய் இளநீர் கொடுத்த பெண்.. ’ரொம்ப நன்றிங்கம்மா’..! ருசித்து குடித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை சென்னை ராணிமேரி கல்லூரியில் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், மகளிர் சுய உதவிக் குழுவினருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதோடு, பெண்கள் வழங்கிய இளநீரை பருகி நன்றி கூறினார்.
இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் அரசு துறைகளையும் தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா இன்று சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் இன்று தொடங்கியது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன்! திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்!
இளைஞர் திறன் திருவிழா
இந்த இளைஞர் திறன் திருவிழாவில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி ஆலோசனைகளை வழங்க கலந்தாய்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தொழில்துறைகளில் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், வேலைவாய்ப்புகள் குறித்து தொழில் துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். விழாவில் பங்கேற்க விரும்பும் இளைஞர்களுக்காக நிகழ்ச்சி நடக்கும் இடத்திலேயே பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின்
மேலும் இளைஞர் திறன் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள சுயஉதவிக்குழு மகளிர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சி 29ஆம் வரை தேதி வரை நடைபெறவுள்ளது. முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மகளின் சுய உதவிக் குழுவினர் அமைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். அப்போது ஒரு சுய உதவிக் குழு சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கினை பார்வையிட்ட முதல்வருக்கு பெண் ஒருவர் இளநீரை வழங்கினார். அதனை வாங்கி பருகிய முதல்வர் நன்றி கூறியதோடு, மற்றொரு அரங்கில் இருந்த மகளிர் சுய உதவிக் குழு தொழில் முனைவோருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
நாட்டின் வளர்ச்சி
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,"நாட்டின் வளர்ச்சி என்பது இளைஞர்களை நம்பியே இருக்கிறது. இளைஞர் சக்தியை ஊக்குவிக்கும் கல்வியை அளிக்க வேண்டும். இளைஞர்களின் தகுதிக்கேற்ப அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டின் திறன் மேம்பாட்டு இயக்கத்தை உருவாக்கியவர் கலைஞர். வேலை இல்லை என்ற நிலையையும், வேலைக்கு தகுதியுள்ள இளைஞர் என்ற நிலையையும் மாற்றம் முயற்சித்து வருகிறோம்.
கனவுத் திட்டம்
இளைஞர்களை திறன்மிக்கவர்களாக்க தொடங்கப்பட்ட கனவுத் திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு அதற்கேற்ப தங்களுக்கு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள நான் முதல்வன் திட்டம். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 10 ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு கல்வி, அறிவு, திறனை உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டுகளுக்கான திறன்களை வழங்கி இளைஞர்களை திறன்மிக்கவர்களாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டின் மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள்; அவர்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும்:" என பேசினார்.