"சேக்கிழாரின் கம்பராமாயணத்தை படித்த இபிஎஸ்.. பாஜகவிடம் பதுங்கியதாலேயே நீட் தேர்வு"- முதல்வர் அட்டாக்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஈரோட்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடினார்
தமிழகம் முழுவதும் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19இல் ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து மேலும், வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல முனை போட்டி
கடந்த தேர்தல்களைக் காட்டிலும் இந்த முறை தமிழ்நாட்டில் பல முனை போட்டி நிலவுகிறது. கடந்த மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் இருந்த அதே கூட்டணியுடன் திமுக இந்த முறையும் தொடர்கிறது. அதேநேரம் மற்ற கட்சிகள் தனித்துக் களமிறங்குகின்றன. அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. இவை தவிர விஜய் மக்கள் இயக்கமும் தனித்துப் போட்டியிடுகிறது.

பிரசாரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.

அரசியல் செய்வார்கள்
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்ற திமுக உழைத்து வருகிறது. ஆட்சியின் நன்மைகள் மக்களுக்குச் சென்றடைய உள்ளாட்சியிலும் திமுக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உள்ளாட்சிகளில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டால், நலத்திட்டங்களை முறையாக மக்களிடம் எடுத்துச் செல்லாமல், இதை வைத்து அரசியல் செய்வார்கள்.

பச்சைப் பொய் பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிக்குப் பொய் சொல்வது கை வந்த கலையாக மாறிவிட்டது.. பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றது யார்? இது மட்டுமா பொள்ளாச்சி சம்பவம் கோடநாடு வழக்கு, நீட் வழக்கு என அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். இப்படி தொடர்ச்சியாகப் பொய்களைச் சொல்லி வருவதால் பொதுமக்கள் அவரை பச்சைப் பொய் பழனிசாமி என்றே அழைக்கின்றனர்.

சேக்கிழாரின் கம்பராமாயணத்தைப் படித்த ஈபிஎஸ்
தினம் ஒரு தகவல் என்பது போலத் தினம் ஒரு பொய்யை எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். ஒரு கமெடி நிகழ்ச்சியைத் தான் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். திமுக ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆட்சிக்கு வரும் முன்னரே கொரோனா காலத்தில் உழைத்தவன் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்த உடன், கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் குறைப்பு, பெண்களுக்கு இலவச போக்குவரத்து, முதல்வர் காப்பீடு, 100 நாட் குறைதீர்ப்பு உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்தோம். ஆனால் சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தைப் படித்த எடப்பாடி பழனிசாமியால் செய்தித்தாள்களைக் கூட படிக்க முடியவில்லை. இதனால் தான் தினசரி பொய்களைச் சொல்லி வருகிறார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர்செல்வமும் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்கள். நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுக- காங்கிரஸ் தான் எனப் பொய் சொல்கிறார்கள். திமுக ஆட்சியில் இருந்த வரை தமிழ்நாட்டில் ஒரு இடத்திலும் நீட் நடக்கவில்லை. அவ்வளவு ஏன் ஜெயலலிதா இருந்த வரை கூட நீட் தேர்வு நடைபெறவில்லை. சொல்லப் போனால் நீட் தேர்வு செல்லாது என திமுக தொடர்ந்த வழக்கில் தான் உத்தரவிட்டது.

வெல்ல வேண்டும்
நீட் தேர்வு தொடர்பாக எந்தவொரு விவாதத்திற்கும் தயாராகவே உள்ளோம். எடப்பாடி பழனிசாமி நீட் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் பாஜக அரசிடம் கேட்கப் பதுங்கியதால் தான் கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வு நடக்கிறது. அதிமுக ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலேயே நாம் 60% இடங்களை வென்றோம். இந்த முறையும் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications