பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும்.. களமிறங்கிய தலைமை செயலக ஊழியர்கள்.. திமுகவுக்கு எகிறும் பிரஷர்
சென்னை: திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுதொடர்பான அறிவிப்பை வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தினர் சென்னையில் உள்ள தலைமை செயலக அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 2 வகையான ஓய்வூதிய திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒன்று பழைய ஓய்வூதி திட்டம். இன்னொன்று புதிய ஓய்வூதிய திட்டம். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை விட பழைய ஓய்வூதிய திட்டத்தில் தான் அரசு ஊழியர்களுக்கு அதிக பலன் இருக்கிறது.

இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் வேளையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று வாக்குறுதிகள் அளித்து அரசு ஊழியர்களின் வாக்குகளை பெறுகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடியப்போகும் நிலையில் இன்னும் அந்த வாக்குறுதி என்பது நிறைவேற்றப்படவில்லை. இதனால் திமுக அரசு மீது அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் தான் இன்று மதியம் உணவு இடைவேளையின்போது சென்னையில் உள்ள தலைமை செயலக வளாகத்தில் தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தை சேர்ந்தவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுதொடர்பான அறிவிப்பை வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள நான்கரை லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதோடு மத்திய அரசு புதிதாக கொண்டு வர உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனால் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று காட்டமாக தெரிவித்தனர்.
நம் நாட்டை பொறுத்தவரை மொத்தம் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும் பழைய ஓய்வூதிய திட்டம் என்பது நடைமுறையில் உள்ளது. பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் தான் செயல்பாட்டில் உள்ளது. இதற்கிடையே தான் கடந்த ஆண்டு மத்திய அரசு என்பிஎஸ் எனும் ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டு வரவில்லை.
இதற்கிடையே தான் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் திமுக எம்எல்ஏ எழிலரசன் சார்பில்அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார். அப்போது ‛‛புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அரசு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுவதற்கு இது அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் செயலாக்கத்துக்கு உரிய வழிக்காட்டுதல்கள், விரிவான செயல்முறைகளை இன்னும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை.
மிக விரைவில் அந்த வழிக்காட்டுதல்கள், செயல்முறைகள் வழிகாட்டப்படும் என்று நம்புகிறோம். அது வெளியான உடனேயே நம்முடைய மாநிலத்தில் தக்கதொரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு முதல்வருடன் கலந்து ஆலோசித்து புதிய குழு அமைக்கப்படும். அந்த குழுவின் வழிக்காட்டுதல்படி நம்முடைய மாநிலத்தில் அந்த ஓய்வூதிய திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்த நம் அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்று கூறினார்.
இதற்கு இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதாக தான் தெரிவித்தது. ஆனால் இப்போது மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தங்கம் தென்னரசு கூறியிருப்பது அரசு ஊழியர்களை டென்ஷனாக்கி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications