“இனி கையேந்த மாட்டேன்! நான் முதலாளி” வாழ்க்கையை மாற்றிய முதல்வரின் ஆட்டோ
சென்னை: ஐந்நூறு பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோக்களை வழங்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒரு குடும்பத்திற்கு 3 பேர் எனக் கணக்கிட்டால்கூட இதன் மூலம் சுமார் 1500 பேரின் வாழ்வாதாரம் காப்பாற்றப் பட்டுள்ளது.
இதில் சிறப்பு என்னவென்றால், இரண்டு திருநங்கைகள் இத்திட்டத்தால் பலன டைந்துள்ளனர்.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள்& தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் பதிவு செய்த இந்த 500 பேர்களும் இந்த ஆட்சியில் முதலாளி ஸ்தானத்திற்கு முன்னேறி உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக 150 பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு ஆட்டோ ரிக்ஷா வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. அப்போது பேசிய பெண்களின் பேச்சை வைத்து எந்தளவுக்கு அவர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.
முதல்வர் கையால் ஆட்டோ வாங்கி இருக்கிறார் திருநங்கை சந்தியா. அவர் என்ன சொல்கிறார்? "முன்பு எல்லாம் திருநங்கைகள் என்றால் மரியாதை கொடுக்கமாட்டார்கள். கேலி, கிண்டல், அவமானங்கள், அசிங்கங்கள் என்று இப்படி எல்லாம் இருந்தது ஒரு காலம்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் பல கஷ்டங்களைப் பட்டுக்கொண்டிருந்தோம். ஆனால், அந்தக் கஷ்டங்களை எல்லாம் மீறி இப்போது பல துறைகளில் நாங்களும் சாதித்துக் கொண்டு வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது முதல்வர் ஸ்டாலின் ஐயா எங்களுக்கு ஆட்டோக்கள் வழங்கி இருக்கிறார். இதனால் எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதைக் கொண்டு நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்.
முதன்முதலாக இரண்டு திருநங்கைகள் முதல்வர் கையால் ஆட்டோ வாங்கி இருக்கிறோம். இது மாபெரும் மாற்றம். எங்களைப் பொறுத்தளவில் இது மிகப் பெரிய உதவி. வருங்காலத்தில் எங்களைப் போன்று பல திருநங்கைகள் வண்டியை வாங்கும் வாய்ப்பு இருக்கிறது. பலர் பதிவு செய்துள்ளார்கள்.

அரசாங்கமே எல்லாம் செய்து கொடுத்துள்ளது. அவர்களே பயிற்சி தந்தார்கள். உரிமம் வாங்கி கொடுத்தார்கள். ஆட்டோ கொடுத்துள்ளார்கள். இனிமேல் என்னை யாரும் கேள்விக் கேட்க முடியாது. நானே முதலாளிஎன்கிறார் இந்தச் சாதனைப் பெண்
முதற்கட்டமாக 15 பேர் பதிவு செய்தோம். அதில் இரண்டு பேர் இப்போது தேர்வாகி இருக்கிறோம். அதில் நான் ஒரு திருநங்கை. மற்றொருவர் திருநம்பி. இந்த அரசாங்கம் எங்களுக்கு நிறையச் சலுகைகளைச் செய்து தருகிறார்கள். உரிய அளவில் எங்களுக்கு மரியாதையையும் தருகிறார்கள்.
முன்பு எல்லாம் பிச்சை எடுப்போம். அதன் மூலம் பத்து, ஐந்து தருவார்கள். அதைக் கொண்டுதான் நாங்கள் எங்கள் சமுதாய மக்களுக்கு உதவி வந்தோம்.

ஆனால், இப்போது நானே ஒரு வேலை செய்து பிழைக்க முடியும். மரியாதையாக என் எதிர்காலத்தை நான் மாற்றிக் கொள்ள முடியும். யாரையும் நம்பி நான் வாழத்தேவையில்லை. இதுவே பெரிய நம்பிக்கை. மனதளவில் பெரிய விடுதலை.
எனக்கு அரசு இப்போது ஆட்டோ கொடுத்துள்ளது. என் ஆட்டோவில் பிரசவத்திற்கு இலவசம். அதற்கு ஒரு பைசா நான் வாங்கமாட்டேன்.
அதைப்போன்று யாரேனும் விபத்தில் சிக்கித் தவித்தாலோ, முதியோர்கள் காசு இல்லாமல் பயணம் பண்ண முடியாமல் கஷ்டப்பட்டாலோ, அவர்களிடம் பைசா வாங்காமல் இலவசமாக என் ஆட்டோவில் பயணிக்க வைப்பேன். அது மட்டும் உறுதி.

எனக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்து, அதற்கு உரிய ஓட்டுநர் உரிமமும் எடுத்துக் கொடுத்துள்ளார்கள். அரசு எனக்கு உதவியதைப் போல் நான் மக்களுக்கு உதவ வேண்டும். அதுதானே நியாயம்?
எனக்கு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தளவுக்கு ஒரு கவுரவமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தந்த முதல்வர் ஐயாவுக்கு நான் மிகப் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்கிறார்
சுமதி, "சுமார் 150 பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தார்கள். அந்தப் பயிற்சியில் வென்றவர்களுக்கு அரசாங்கமே ஓட்டுநர் உரிமமும் வாங்கி கொடுத்தார்கள். இப்போது ஆட்டோவும் மானியத்தில் வழங்கி இருக்கிறார்கள். இதை எல்லாம் விட 2 மாத தவணையையும் அரசே கட்டுவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது.

பெண்களாக நாங்களும் சொந்தக் காலில் நிற்கவேண்டும். நாங்களும் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பதற்காக இந்த ஆட்டோவை வழங்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது நல்ல மனசுக்கு மிக்க நன்றி" என்கிறார் மலர்ச்சியான புன்னகையோடு
"முன்பு எல்லாம் மாச சம்பளத்திற்கு ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தேன். அதில் தினக்கூலியாகப் பணம் கிடைக்கும். அந்த வருமானம் பெரிய அளவில் இருக்காது. இப்போது முதல்வர் ஸ்டாலின் எங்களுக்காகவே சொந்த ஆட்டோ வழங்கி இருக்கிறார்.

இதன் மூலம் ஒருநாளைக்கு எனக்கு 1500 ரூபாய் வரை கிடைக்கும். இது மிகப் பெரிய வருமானம். என் உழைப்பில் நான் ஒரு சொந்த ஆட்டோவை வைத்துக் கொள்ள முடியும். அதற்கு அரசாங்கம் மானியம் வங்கி இருக்கிறது. இந்த நல்ல வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த முதல்வர் ஐயாவுக்கு மிக்க நன்றி" என்கிறார் இவர்.
உஷா, "வீட்டில் இதுவரை ஹவுஸ் ஒய்ஃப் ஆகத்தான் இருந்து வந்தேன். வீட்டுக்கஷ்டம். அதற்காக வேலைக்குப் போகத் தொடங்கினேன். காலையில் 8 மணிக்கு எல்லாம் வேலைக்குப் போய் ஆகவேண்டும்.

ஒரு கால் மணிநேரம் தாமதம் ஆகிவிட்டால், உடனே முகத்தில் அறைந்த மாதிரி பேசுவார்கள். அப்போது மனசு வலிக்கும். மனசை மாற்றிக் கொண்டு அடுத்த நாள் மீண்டும் வேலைக்குப் போவேன். என்ன செய்ய முடியும்? நம் தலையெழுத்து அப்படி என்று விட்டு விடுவேன்.

ஆனால், இப்போது எனக்குப் பெரிய சுதந்திரம். அரசாங்கம் நான் உழைத்துச் சம்பாதிக்க ஆட்டோ வழங்கி இருக்கிறது. என் நேரத்திற்கு நான் ஆட்டோ ஓட்ட முடியும். யாரிடமும் கைக்கட்டி நிற்கத் தேவையில்லை. சொந்த தொழில். கடுமையாக உழைத்தால் முழுப் பலனும் நமக்குத்தான்என்கிறார்.
இந்த முகங்களில் தெரிகிறது முதல்வரின் வெற்றி!













Click it and Unblock the Notifications