வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்.. 'அப்பா இடத்தை பிடிக்கணும்'.. உருகிய ராமதாஸ்.. பா.ம.க.வின் அடுத்த மூவ்?
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான கட்சிகளில் பா.ம.க.வும் ஒன்று. தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக வலுவாக காலூன்ற வேண்டும் என்று முயற்சித்து பார்த்த பா.ம.க அதில் தோல்வியடைந்து வருகிறது.
இதனால் வேறு வழியின்றி தாங்கள் எதிர்த்த தி.மு.க, அ.தி.மு.க வுடன் மாறி மாறி கூட்டணியில் ஐக்கியமாகி தேர்தலை சந்தித்து வருகிறது.கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வும் ஆட்சியை பறிகொடுத்ததால் இந்த தேர்தலுக்கு பிறகு பா.ம.க.வின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் தி.மு.க பக்கம் சாய்வது போலவே இருக்கின்றன.

போட்டு தாக்கிய அன்புமணி
தேர்தலுக்கு முன்பாக தி.மு.க.வை பா.ம.க பல இடங்களில் போட்டு விளாசியது. 'ஸ்டாலினுக்கு நிர்வாகத் திறமை இல்லை. அவர் முதல்வராக தகுதி இல்லை' என்று கடுமையாக தாக்கினார் அன்புமணி ராமதாஸ். பா.ம.க நிறுவனர் ராமதாசும் தனது பங்குக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால் தேர்தலுக்கு பிறகு இந்த காட்சிகள் அப்படியே மாறி விட்டன.

போட்டி போட்டு பாராட்டு
முதல்வராக பதவியேற்ற குறுகிய காலத்திலேயே தமிழ்நாட்டில் கொரோனாவை ஒழித்தது, மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் கொண்டு வருவது என்று மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார் மு.க.ஸ்டாலின். இதேபோல் ஸ்டாலினின் செயல்பாடுகளை போட்டி போட்டு பாராட்டு தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர் ராமதாசும், அன்புமணி ராமதாசும்.

அன்புமணி பாராட்டு பத்திரம்
ஸ்டாலின் பதவியேற்றபோது அறிவித்த 5 திட்டங்களுக்கு முதல் ஆளாக பாராட்டு தெரிவித்தார் டாக்டர் ராமதாஸ். இதேபோல் கொரோனாவை கட்டுப்படுத்திய விதத்தில் மு.க.ஸ்டாலினை அடிக்கடி டுவிட்டரில் பாராட்டி வருகிறார் ராமதாஸ். முதல்வர் ஸ்டாலினின் கொரோனா தடுப்பு செய்லபாடுகள் மிக சிறப்பாக இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் பாராட்டு பத்திரம் வாசித்தார்.

சட்டசபையில் மவுனம்
இதேபோல் சட்டசபையில் அ.தி.மு.க உறுப்பினர்களும், பா.ஜ.க. உறுப்பினர்களும் தி.மு.க அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்ப சட்டசபையில் புத்தர்போல் அமைதி காத்தனர். பா.ம.க உறுப்பினர்கள். தி.மு.க.வுக்கு எதிராக பா.ம.க.வுக்கு கேள்வி எழுப்ப விருப்பம் இல்லை என்றும் அவர்கள் தி.மு.க பக்கம் சாய தொடங்கி விட்டனர் என்றும் அரசியல் நிபுணர்கள் கணித்தனர்.

ஸ்டாலின் வாழ்த்து
இந்த நிலையில் பா.ம.க.வும், தி.மு.க.வும் நெருக்கமாக இருப்பதுபோல் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதாவது பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸின் 83-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதேபோல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் ராமசுதாசுக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

உருகிய ராமதாஸ்
அப்போது ராமதாஸின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து 'உங்கள் தந்தை கருணாநிதி என்னுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். ராமதாஸை விட்டால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராட வேறு யாரும் இல்லை என்று அனைவரிடமும் கூறுவார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார். உங்கள் தந்தையின் அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும்" என்று ஸ்டாலினை ராமதாஸ் உருக்கமுடன் வாழ்த்தி உள்ளார்.

நெருக்கம் அதிகமாகிறது
இந்த நிகழ்வு மூலம் பாமகவுக்கும், திமுகவுக்கும் அதிகமாகி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கடந்த தேர்தலில் பெற்ற வெற்றி தி.மு.க.வுக்கு முழுமையாக திருப்தி அளிக்கவில்லை. இதனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அரசு வெற்றி பெற வேண்டும் என்ற முடிவில் மு.க.ஸ்டாலின் இப்போதே காய் நகர்த்தி வருகிறார். கொங்கு மண்டலத்தில் இதற்கான வேலையை அவர் தொடங்கி விட்டார்.

பா.ம.க.வின் மூவ்
வட மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு ஓரளவு வாக்கு வங்கி இருப்பதால் அடுத்த தேர்தலில் அதை அப்படியே பெற நினைக்கிறது தி.மு.க. இதை மனதில் வைத்தே தி.மு.க.வும், பா.ம.க.விடம் நெருக்கம் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் ஏற்கனவே அ.தி.மு.க மக்களிடம் செல்வாக்கு இழந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தி.மு.க அரசு கையில் எடுத்துள்ளதால் அ.தி.மு.க முற்றிலுமாக செல்வாக்கு இழந்து விடும் என்று பா.ம.க கருதுகிறது. இது அடுத்த தேர்தலுக்கு உதவாது என்பதால் இதனை மனதில் வைத்தே பா.ம.க.வின் அடுத்த மூவ் இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் அடித்து கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications