Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஜி ஆளுநர் பாத்திமா பீவி மறைவு.. முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, இபிஎஸ், ஓபிஎஸ் புகழஞ்சலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்சநீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதியும் தமிழ்நாடு முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவியின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 1997 முதல் 2001-ம் ஆண்டு வரை ஆளுநராக பதவி வகித்தவர் பாத்திமா பீவி. ஜெயலலிதாவுக்கு சட்டத்தை மீறி முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தது, கருணாநிதி கைது நடவடிக்கையில் மத்திய அரசுக்கு தவறான அறிக்கை தந்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து மத்திய அரசால் நீக்கப்பட்டவர் பாத்திமா பீவி. தற்போது வயது முதுமை காரணமாக கேரளாவின் கொல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 96. பாத்திமா பீவியின் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tamil Nadu CM MK Stalin, Governor RN Ravi condole demise of Fathima Beevi

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்: முன்னாள் ஆளுநரும் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்கும் உரியவர் மறைந்த பாத்திமா பீவி. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநர் ரவி: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் நீதிபதி எம். ஃபாத்திமா பீவியின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. மக்கள் சேவையில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் உள்ளன. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி: உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்குரியவர் பாத்திமா பீவி. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்குரியவரும், தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஜெயலலிதமீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவருமான நீதியரசர் எம். பாத்திமா பீவி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். நீதியரசர் பாத்திமா பீவி அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சசிகலா: தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அம்மையார் பாத்திமா பீவி அவர்கள் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாகவும், தமிழகத்தின் முதல் பெண் ஆளுநராகவும் தன்னலமற்று சேவையாற்றியது பெண் சமுதாயத்திற்கே மிகவும் பெருமை சேர்த்தது. அம்மையார் பாத்திமா பீவி அவர்கள் கேரளாவில் 1950-ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கி, நீதித்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மேலும், 1989-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் தனது பணிகளை சிறப்புடன் ஆற்றியவர். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் ஆளுநராக இருந்தபோதும், அம்மா அவர்களுடன் நல்ல நட்புடன் இருந்தவர்.ஜெயலலிதா, பாத்திமா பீவி மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டு இருந்தார்கள். தமிழகத்திற்கு ஜெயலலிதா கொண்டு வந்த எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களுக்கு அம்மையார் பாத்திமா பீவி அவர்கள் மிகவும் உறுதுணையாக இருந்ததை இந்நேரத்தில் எண்ணி மிகவும் பெருமையடைகிறேன். அம்மையார் பாத்திமா பீவி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநருமான பாத்திமா பீவி அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின் போது தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்த பாத்தீமா பீவி அவர்கள் அரசுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனுக்கான கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியதையும் இந்த நேரத்தில் நினைவுகூறுகின்றேன். நீதித்துறையின் உயர்மட்ட பதவிகளில் பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க தொடர்ந்து போராடி, சமத்துவமிக்க நீதியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த பாத்திமா பீவி அவர்கள் ஆற்றிய பணிகள் இந்திய நீதித்துறை வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+