மத்திய அரசை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம்!
சென்னை: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்த தனித் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் வன்னியர் உள் இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றை சட்டப்பூர்வமாக செயல்படுத்த முடியும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் 10.5% வன்னியர் உள் இடஒதுக்கீடு தொடர்பாக பாமகவின் ஜிகே மணி கேள்வி எழுப்ப விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”இப்போது நீங்கள் (பாமக) எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்குப்பிறகுதான் இதை அமல்படுத்த முடியும். ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் உறுப்பினர் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நம்முடைய உறுப்பினர் கோ.க. மணி அவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமென இங்கே பேசி, அதற்கு நம்முடைய அமைச்சர் பெருமக்கள் உரிய விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், ஜாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கு கோ.க. மணி அவர்கள் ஆதரவு தரவேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications