பிப்.16இல் தொடங்கும் 45ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை புத்தகக் கண்காட்சியை வரும் பிப்ரவரி 16ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஜன. 6 முதல் 23 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுவதாக இருந்து.
இருப்பினும், ஓமிக்ரான் பரவல் காரணமாக அனைத்து விதமான கண்காட்சி மற்றும் பொருட்காட்சிக்குத் தமிழக அரசு தடை விதித்தது. இதனால் புத்தகக் கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டது.
ஒரே போடு போட்ட ஸ்டாலின்.. ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. தமிழக அரசு அதிரடி..!
தமிழக அரசு அனுமதி
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், தற்போது கொரோனா ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்தச் சூழலில் பபாசி எனப்படும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்தத் தமிழக அரசு அனுமதி அளித்தது.
முதல்வர் தொடங்கி வைக்கிறார்
அதன்படி வரும் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை 45வது புத்தகக் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 16ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க உள்ளார், கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளை பபாசி அமைப்பினர் மிகத் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
கட்டுப்பாடுகள்
இன்று முதல் பபாசி இணையதளத்தில் இருந்து புத்தகக் கண்காட்சிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் புத்தகக் கண்காட்சியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
800 அரங்குகள்
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பபாசி நிர்வாகிகள், "கடந்த ஜனவரி மாதம் 1000 அரங்குகளில் பிரம்மாண்டமான முறையில் புத்தகக் கண்காட்சியைத் திட்டமிட்டிருந்தோம். இப்போது அரசின் வழிகாட்டுதல்கள் படி 200 அரங்குகள் குறைக்கப்பட்டு, 800 அரங்குகளில் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 500 பதிப்பகங்கள் பங்கேற்க உள்ளனர்" என்றார். மேலும், சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.