"குஜராத் மாடலை விட திராவிட மாடல் அரசு சிறந்தது.." புட்டுபுட்டு வைத்த பிடிஆர்!
சென்னை: குஜராத் மாடல் அரசை விட தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு சிறந்தது என புள்ளவிபரங்களோடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளார். திமுகவின் ஐடி விங்க் சார்பில் செப்டம்பரை திராவிட மாதம் என கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் திராவிட மாத கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இன்று இரவு திராவிட பொருளாதாரம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மறக்கவே முடியாது.. அப்பாவின் இடத்துக்கு வர வேண்டும் எனக்கூறிய கருணாநிதி.. நினைவுகளை பகிர்ந்த பிடிஆர்
அமைச்சர் பிடிஆர் பங்கேற்பு
திமுகவின் ஐடி விங்க் சார்பில் டுவிட்டர் ஸ்பேஜில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது திமுக அரசின் திட்டங்கள் பற்றியும், செயல்பாடு குறித்தும் அவர் விளக்கி பேசினார். மேலும் தமிழக பொருளாதார நிலவரம் பற்றியும் கூறினார். அதோடு பொதுமக்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசினார். இந்த கலந்துரையாடலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். அப்போது குஜராத் மாடலை விட திராவிட மாடல் தான் சிறந்தது என அவர் பேசினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
திராவிட அரசின் முக்கிய நோக்கம்
பொதுமக்களின் வாழ்க்கையை அனைத்து வடிவிலும் முன்னேற்றம் செய்வது தான் தமிழக அரசான திராவிட மாடல் அரசின் முக்கிய நோக்கம். மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் திட்டங்கள் செய்வதற்கும், தனிநபர் லாபத்துக்காக செய்வதற்கும் முக்கிய வித்தியாசம் உள்ளது. ஒரு ரூபாய் செலவு செய்தால் எந்தளவுக்கு மக்கள் நாளை பலன் கிடைக்கும் என்பதை பார்க்க வேண்டும்.
குஜராத்தை விட சிறந்த தமிழ்நாடு
வடமாநிலங்களான உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது தனிநபர் வருமானம், கல்வி, மருத்துவம், சமூக நீதியிலும் பின்தங்கி உள்ளன. குஜராத்தை விட தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. தனிநபர் வருமானம் குஜராத்தில் அதிகமாக இருக்கலாம். ஆனால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உயர்கல்வி படிப்பது என்பது தமிழ்நாட்டில் 80 சதவீதமாக உள்ளது. இது குஜராத்தில் 55 சதவீதம் முதல் 60 சதவீதமாக தான் உள்ளது. தமிழகத்தில் 1000 பேருக்கு 4 டாக்டர்கள் என்ற நிலை உள்ளது. ஆனால் குஜராத்தில் 1000 பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலை இருக்கிறது.
ஒருசேர வளர்ச்சி
தமிழ்நாடு என்பது பொருளாதாரம், சமூக நீதி என அனைத்து வகையிலும் ஒருசேர வளர்ந்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஜிடிபியை சார்ந்தது மட்டும் இல்லை. தத்துவ அடிப்படையில் நிறைய பேர் பேசலாம். ஆனால் அந்த தத்துவத்தின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் தினமும் செயல்பட வேண்டும். இதனை நிறைவேற்ற பெரிய திறமை வேண்டும். இதனை நிறையபேர் பின்பற்றுவது இல்லை. தத்துவத்தோடு செயலும் இருக்க வேண்டும்.
அனைவருக்கான முன்னேற்றம்
தமிழகத்தில் முதல் அமைச்சர் ஸ்டாலின் யாரும் பின்தங்கி விடாமல் அனைவருக்குமான முன்னேற்றத்தை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். நகர்புறம், கிராமப்புறங்கள் என அனைத்து பகுதிகளில் வளர்ச்சி இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்பி திட்டங்களை முன்னெடுக்கிறார். சமூகநீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி தான் திராவிடமாடலாகும். திராவிட மாடல் தான் ஜனநாயக மாதிரியாக உள்ளது.