நேராக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கே போன ப. சிதம்பரம்.. உறுதியாகும் திமுக காங்கிரஸ் கூட்டணி?
சென்னை: தமிழ்நாட்டில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு விரைந்துள்ளார்.. தொகுதிப் பங்கீட்டில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டப்படாத நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இரு கட்சிகளும் ஒருமித்த கருத்தை எட்டுவதில் சிக்கலை எதிர்கொள்வதால், இது பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கல்
ஒரு பக்கம் காங்கிரஸ் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்கிறது. இருப்பினும், திமுக அவ்வளவு இடங்களைக் கொடுக்க ரெடியாக இல்லை. கடந்த 2021 தேர்தலைப் போலவே 25 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா இடத்தையும் மட்டுமே வழங்க முடியும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதுவே இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்புமே இறங்கி வரத் தயாராக இல்லாத நிலையில், கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த இழுபறி காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் எனத் தொடர்ந்து லாபி செய்து வருகிறார்கள். விஜய்யின் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் எனச் சொல்லி, ராகுல் காந்தியிடம் அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
திமுக காலக்கெடு
மார்ச் 3ஆம் தேதிக்குள் (இன்று) காங்கிரஸ் ஒரு முடிவை எடுக்காவிட்டால், கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என திமுக காலக்கெடு விதித்துள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றே தீர வேண்டும்.. அதுவே திமுகவின் எதிர்காலத்துக்கு அவசியமானது என்பதால், கூடுதல் தொகுதிகளை வழங்குவது சாத்தியமில்லை என திமுக உறுதியாகத் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக, திமுகவுக்கு எதிராகத் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பொதுவெளியில் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இது திமுக பொறுமையைச் சோதிப்பதாக அமைந்தது. இதுபோல கருத்துச் சொல்வோர் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக விரும்பியது. இருப்பினும், கட்சித் தலைமை அதுபோல எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.
திமுக வட்டாரங்கள்
இது தொடர்பாக திமுக வட்டாரங்கள், "கடந்த 5 ஆண்டுகளில் தாங்கள் செய்த பணிகளைக் காங்கிரஸ் நிரூபிக்கட்டும். களத்தில் இறங்கி என்ன செய்தார்கள் என்பதைக் காட்டினால் கூடுதல் தொகுதிகளை அவர்கள் உரிமை கோரலாம். அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் கிளைத் தலைவர்களை நியமிக்கவோ, வாக்குச்சாவடி முகவர்களை ஒழுங்கமைக்கவோ கூட முடியவில்லை. இப்படி இருக்கும் போது, தேர்தல் பணிகளை அவர்கள் எப்படித் திறம்படச் செய்ய முடியும்?" எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.
முக்கிய மீட்டிங்
அதேநேரம் தமிழகத்தில் ராகுல் காந்தியின் செல்வாக்கு கணிசமானது என்றும், கூட்டணிக்குக் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைச் சேர்க்கும் என்கிறது காங்கிரஸ்! இந்த விவகாரங்களில் ஒரு சுமுகமான தீர்வை எட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சோனியா காந்தியின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டுள்ளார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு ப சிதம்பரம் நேரில் விரைந்துள்ளார். கூட்டணி தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் நிலவும் சூழலில், சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது












Click it and Unblock the Notifications