நாளை மாலை 6 மணிக்கு மேல் இதெல்லாம் செய்யவே கூடாது.. தேர்தல் ஆணையம் மேஜர் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாளை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை எவ்வித மின்னணு சாதனங்கள் மூலமாகவும் தேர்தல் தொடர்பான விவகாரங்களை மக்கள் பார்வைக்கு வைக்கக் கூடாது.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 15ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கடந்த ஒரு மாதமாக அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நாளையுடன் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது. நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் நாளை மாலை 6 மணிக்கு பிறகு என்ன விதிமுறைகள் அமலில் இருக்கும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை முடிவடைய உள்ள நிலையில், என்ன செய்யலாம் செய்யக் கூடாது என்பது தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அதன்படி, 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். 21.4.2026 அன்று மாலை 6 மணி முதல் பரப்புரை முடிவடையும் வரையில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை 6 மணி முதல் என்ன செய்யக் கூடாது?
1) தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
2) யாதொரு தேர்தல் விவகாரத்தையும். திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
3) பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது. இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
4) தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 21.4.2026 அன்று மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
5) கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறியப்படும்.
6) வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அன்று மாலை 6 மணி முதல் அனுமதிகள், 21.4.2026 அன்று மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.
7) சட்டமன்றத் தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதிகளை பொறுத்தவரை, அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும் தேர்தல் முகவர் அல்லது பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் வைத்திருக்கலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.
8) வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.
9) இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள்/ அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications