மெதுவா.. மெதுவா.. 10 நாளுக்கு பிறகு தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்
சென்னை: 10 நாட்களுக்குப் பிறகு தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். தமிழகத்தில் 4.87 கோடி பேர் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். கரூர் மாவட்டம் 92.6% பெற்று முதலிடம் பிடித்துள்ளது. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 4 முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. அன்றைய நாளின் இறுதியில் வாக்குப்பதிவு 85.15% என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 2 நாட்களுக்குப் பிறகு, மறுசரிபார்ப்பிற்குப் பின் இந்த தற்காலிக சதவீதத்தை 85.10% ஆக தேர்தல் ஆணையம் திருத்தியது.

பல ஆண்டுகளாக தேர்தல்களைச் சந்தித்து வரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய திராவிடக் கட்சிகளும், வாக்குச் சாவடி மற்றும் தொகுதி வாரியாக தங்களின் வெற்றி வாய்ப்புகளைக் கணிக்க படிவம் 17C-ஐ பெற்றுள்ளன. ஆனால், நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள், திமுக, அதிமுகவின் இந்த அனுபவத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், தபால் மற்றும் சேவை வாக்குகள் இல்லாத இறுதி அறிக்கைகளுக்காக காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் 2026 க்கான வாக்கு எண்ணிக்கை, வரும் திங்கட்கிழமை (மே 4) நடைபெற உள்ளது. இதற்காக 75,064 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் பெறப்பட்ட தபால் வாக்குகள் ஆகியவற்றின் வாக்கு எண்ணிக்கை, இதற்காக அமைக்கப்பட்ட 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடத்தப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVMs) பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே வளாகங்களில், தபால் வாக்குகள் மற்றும் மின்னணு முறையில் அனுப்பப்பட்ட தபால் வாக்குகளை (ETPBs) எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக மொத்தம் 3,324 மேஜைகள் பயன்படுத்தப்படும்.
இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்து 10 நாட்களுக்குப் பிறகு தொகுதி வாரியான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். தமிழகத்தில் மொத்தமாக 4.87 கோடி பேர் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். அதாவது வாக்குப்பதிவு சதவீதம் 85.10%. கரூர் மாவட்டம் 92.6% பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் குறித்த புள்ளிவிவரத்தை தொகுதிவாரியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வரை தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, ஆண் வாக்காளர்கள் 2,35,34,720, பெண் வாக்காளர்கள் 2,52,59,596 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 4.517 என மொத்தம் 4,87,98,833 பேர் இத்தேர்தலில் வாக்களித்துள்ளனர். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 85.10 சதவீதம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications