பீலா வெங்கடேசன் வாழ்வில் இத்தனை போராட்டங்களா? கடைசி காலத்திலும் நிம்மதி இல்லையே!
சென்னை: தமிழக எரிசக்தித் துறைச் செயலாளர் பீலா வெங்கடேசன் (56) ஐஏஎஸ் மூளை புற்றுநோய் காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது வாழ்க்கையில் கடைசி காலம் வரை சோகத்திலேயே போனது அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பீலா வெங்கடேசன். இவர் 1969 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி பிறந்தார். இவரது தாய் ராணி வெங்கடேசன், சாத்தான்குளம் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவாக இருந்தார்.

அது போல் இவரது தந்தை வெங்கடேசன், தமிழக காவல் துறை டிஜிபியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். எம்பிபிஎஸ் படித்துள்ள பீலா, கடந்த 1997ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்விலும் வென்றார். 1998ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை பீகாரிலும், ஜார்க்கண்டிலும் பணியாற்றியிருந்தார். அதன் பின்னர் தமிழகத்திற்கு மாற்றப்பட்டு 2000- 2001 ஆம் ஆண்டு வரை செங்கல்பட்டு சார் ஆட்சியராகவும், 2001- 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
என்ன பதவி
இதைத் தொடர்ந்து சமூக நலத்துறை கூடுதல் இயக்குநர், ஆதிதிராவிடர் நலத்துறை துணை செயலர் பதவிகளிலும் பணியாற்றியவர். மீண்டும் 2003ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து மத்திய ஜவுளித் துறையில் 2014ஆம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார். அதே ஆண்டு தமிழகம் வந்த அவர் சென்னை மீன்வளத்துறை ஆணையராகவும், அதன்பின் நகர ஊரமைப்புத்துறை ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் பொறுப்புகளிலும் இருந்தார்.
கொரோனா தொற்று காலம்
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக பணியாற்றியிருந்தார். அப்போது மக்களை காக்க கொரோனாவுடன் கடுமையாக போராடினார். இதைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலாளர், கைத்தறித் துறை ஆணையர், நில சீர்திருத்தத் துறை ஆணையர் பொறுப்புகளையும் அவர் வகித்தார். கடைசியாக எரிசக்தித் துறை செயலாளராக பணியாற்றினார்.
சோகம்
இவர் வகித்த ஒவ்வொரு பொறுப்பிலும் நேர்மையாக இருந்துள்ளார். பிறருக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர். இப்படிப்பட்ட பீலா ராஜேஷ் , கடைசி வரை போராடிக் கொண்டே இருந்தார் என்பதுதான் சோகத்தின் உச்சம். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாஸை கடந்த 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து பீலா வெங்கடேசன், பீலா ராஜேஷ் ஆனார். இந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பீலாவுக்கும் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்தார். தனது பெயரையும் பீலா வெங்கடேசன் என மாற்றிக் கொண்டார்.
தையூர் பங்களா
பீலாவுக்கு தையூரில் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட பங்களா இருக்கிறதாம். பீலாவும் ராஜேஷும் இந்த வீட்டில்தான் வசித்து வந்தனராம். கணவர் மீதான வழக்கு காரணமாக தையூர் வீட்டை பூட்டிய பீலா, வீட்டிற்குள் யாரையும் விட வேண்டாம் என காவலாளிக்கு உத்தரவிட்டிருந்தார். கடந்த ஆண்டு தையூர் பங்களாவுக்கு ராஜேஷ் தாஸ் சென்ற போது, பீலா உத்தரவை காவலாளி தெரிவித்தாராம். ஆனால் ராஜேஷ், ஆட்களை வரவழைத்து காவலாளியை அடித்து துரத்திவிட்டு அந்த வீட்டில் ராஜேஷ் குடியேறினாராம்.
10 பேர்
மேலும் அவருக்கு பாதுகாப்பாக 10 பேர் அங்கிருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பீலா, மின்வாரிய நிர்வாகத்திடம் ஆன்லைன் மூலம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் "எனது வீட்டை சில மாதங்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், தற்காலிகமாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
மின் துண்டிப்பு
இதையடுத்து மின் இணைப்பை துண்டிக்க கேளம்பாக்கத்தில் இருந்து மின்வாரிய அதிகாரிகள் வந்த போது அங்கு ராஜேஷ் தாஸும் 10 பேரும் தகராறு செய்தனராம். இதனால் அஞ்சிய மின்வாரிய ஊழியர்கள் வீட்டிற்கு செல்லும் மின் வயரை, கம்பத்தில் இருந்து துண்டித்தனர். இந்த சம்பவங்களை அறிந்த பீலா, தனது காவலாளியை தாக்கியதற்காக ராஜேஷ், 10 அடியாட்கள் மீதும் புகார் அளித்திருந்தார். மேலும் அந்த பங்களாவை விட்டு அவர்களை வெளியேற்றுமாறும் புகாரில் கேட்டுக் கொண்டார். இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸாரும் ராஜேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
கடைசி வரை போராட்டம்
இப்படி மக்களை காக்க கொரோனா சவால்களுடன் போராடிய பீலா வெங்கடேசன், மூளை புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். நீண்ட காலமாக விடுப்பில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரது உடல் மெலிந்து, முகமெல்லாம் மாறி, தலையில் முடியில்லாமல் மிகவும் பரிதாபத்துக்குரிய வகையில் இருந்தாராம். இதனால் அவர் யாரையும் சந்திக்காமல் தனது உறவினர்களை மட்டுமே சந்தித்தாராம். இப்படி கடந்த சில ஆண்டுகளாக போராடி போராடி நேற்றுடன் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications