டீசல் வரியை ஏன் குறைக்கவில்லை தெரியுமா.. பிடிஆர் சொன்ன விளக்கம்.. அப்படியே அதிமுகவுக்கும் "குட்டு"
சென்னை: தமிழ் நாட்டில் பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், டீசல் மீதான விலை குறைக்கப்படவில்லை ஏன் என்பது பற்றி சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் பேட்டி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 13ம் தேதி சட்டசபையில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்தார்.
அப்போது, பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு செய்யப்படுகின்றது என்று அறிவிப்பு வெளியிட்டார். அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

5 ரூபாய் குறைப்பதாக வாக்குறுதி
அதேநேரம் திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 5 ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் பெட்ரோலுக்கு மட்டும் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதுவும் மூன்று ரூபாய்தான் வரிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. டீசலுக்கு சுத்தமாக வரி குறைப்பு செய்யப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோல் மீது வரி குறைப்பு செய்திருப்பது வாகன ஓட்டிகளுக்கு பலன்தரும். டீசல் மீது வரி குறைப்பு செய்திருந்தால் சரக்கு போக்குவரத்துக்கான செலவு குறைந்து அந்த பலன் பரவலாக மக்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்து, அத்தியாவசிய பொருட்கள் விலை, குறையத் தொடங்கி இருக்கும் என்று அறிவுரை கூறியிருந்தார்.

வரியை கூட்டிய அதிமுக அரசுகள்
இந்த நிலையில் தான், சட்டசபையில் இன்று நிதி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டீசல் மீது ஏன் வரி குறைப்பு செய்யவில்லை என்பது பற்றி ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியில் மூன்று முறை பெட்ரோல் மற்றும் டீசல் வரி உயர்த்தப்பட்டது. ஆனால் இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் 4 முறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டது. இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் பெட்ரோல் மீது வரியை குறைத்துள்ளோம். சமூகநீதி மற்றும் பொருளாதார நீதியை நிலைநாட்ட தமிழக அரசு பணியாற்றி வருகிறது.

நேரடி பலன்
பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் சுமார் 3 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். அதேநேரம், டீசல் மீதான வரியை குறைத்தால் அதன் பலன் நேரடியாக மக்களுக்கு கிடைக்குமா என்று சொல்ல முடியாது. எனவே முதலில் பெட்ரோல் மீதான வரியை குறைத்து உள்ளோம். இவ்வாறு பி டிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் திட்டம்
டீசல் மீதான வரியை குறைக்கும் போது லாரி போன்ற கனரக வாகனங்களில் இயக்க செலவு குறையும். ஆனால் அந்த பலன் பொது மக்களுக்கு மாற்றிவிடப்படுமா அல்லது விலை குறைப்பு நடக்காமல் லாரி மற்றும் பஸ் உரிமையாளர்கள் அதன் பலனை வைத்துக் கொள்வார்களா என்பது உறுதி கிடையாது . ஆனால் பெட்ரோல் மீதான வரியைக் குறைக்கும் போது அதை பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்கள், கார்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் மக்களுக்கு நேரடியாக பலன் சென்று சேருகிறது என்பது நிதியமைச்சர் வாதமாக இருக்கிறது என்கிறார்கள் இந்த துறை சார்ந்தவர்கள்.
Recommended Video

வரி குறைக்க நிர்மலா சீதாராமன் மறுப்பு
தமிழக அரசு, பெட்ரோல் மீதான வரியை குறைத்து உள்ள நிலையில் , மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் பரவலாக எழுந்தன. ஆனால், அவ்வாறு குறைக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் வெளியிடப்பட்ட எரிபொருள் பாத்திரங்களுக்கு இப்போதைய அரசு ஐந்து வருடங்களில் 70 ஆயிரத்து 195 கோடி வரை செலுத்தி இருப்பதாகவும் 2026ம் ஆண்டு வரை 37 ஆயிரம் கோடியாக செலுத்த வேண்டியிருப்பதாகவும், எனவே எரிபொருள் விலையை குறைக்க இயலாது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications