மாறும் காட்சி.. கூவம் ஆற்றின் குறுக்கே 2 உயர்மட்ட பாலங்கள்.. ரூ.74.36 கோடியில் சூப்பர் திட்டம்..பலே
சென்னை: சென்னையில், சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74.36 கோடி மதிப்பீட்டில் 2 உயர்மட்ட பாலங்கள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் விரைவில் பணிகள் துவங்கி நடைபெற உள்ளது.
சென்னை நகரை சிறந்ததாக மாற்றும் வகையில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் சேர்ந்து பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக சென்னையில் ஓடும் கூவம் ஆற்றை சுற்றி வசிக்கும் மக்களுக்காக பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சட்டசபை கூட்டத்தில் அறிவிப்புகள் வெளியான நிலையில் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2 உயர்மட்ட பாலங்கள்
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு 2022-23ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது சட்டசபையில் பேசினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சென்னை வளசரவாக்கம் பகுதி கூவம் ஆற்றின் குறுக்கே யூனியன் சாலையையும், பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் 2 உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் ஒன்றாகும்.

எந்தெந்த இடங்களில் பாலம்
அதனடிப்படையில் சென்னை மாநகராட்சி சார்பில் கூவம் ஆற்றின் குறுக்கே சின்ன நொளம்பூர் பகுதியில் ஒரு உயர் மட்டப் பாலமும், சன்னதி முதல் குறுக்குத்தெருவில் மற்றொரு உயர் மட்டப் பாலமும் அமைக்க திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக சின்ன நொளம்பூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே அமையும் பாலத்திற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பீடு, வரைபடங்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் வாங்கப்பட்ட நிலங்களை நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் முடிவுற்ற பின் மாநகராட்சியிடம் இலவசமாக ஒப்படைக்க தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது.

ரூ.74.36 கோடியில் திட்டம்
இதனைத்தொடர்ந்து சென்னை வளசரவாக்கம் கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலையையும், யூனியன் சாலையையும் இணைக்கும் வகையில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் சின்ன நொளம்பூர் பகுதியில் ரூ.42 கோடி 71 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், சன்னதி முதலாவது குறுக்குத் தெருவில் ரூ.31 கோடி 65 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், மொத்தமாக ரூ.74 கோடியே 36 லட்சம் மதிப்பில் 2 உயர் மட்டப் பாலங்கள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாணை வெளியீடு
இந்த 2 பாலங்கள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் அதனை சென்னை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சின்ன நொளம்பூர் மற்றும் சன்னதி முதலாவது குறுக்குத்தெரு மற்றும் அதனை சுற்றிய மக்கள் பயனடைய உள்ளனர்.












Click it and Unblock the Notifications