அரியர் ரத்து விவகாரத்தில் மாணவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கிறது - அரசு மீது உதயநிதி குற்றச்சாட்டு
நீட் தேர்வு, ஆன்லைன் கல்வி, அரியர் தேர்வுகள் ரத்து போன்ற அனைத்து விவகாரங்களிலும் தமிழக அரசு மாணவர்களை குழப்பத்திலேயே வைத்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மாணவர்களை எப்போதும் தமிழக அரசு குழப்பத்திலேயே வைத்திருப்பதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும் சென்னையில் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக்கோரி கையில் பதாகைகளை ஏந்தி உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா பரவல் அச்சம் உள்ள இந்த காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பதாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்களால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை இருப்பதாலும் இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர். அதேபோல் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும் போராட்டம் நடைபெற்றது.
இந்த முறையாவது திமுக ஜெயிக்க வேண்டுமா.. கொங்கு மண்டலத்தை கொக்கி போட்டு இழுக்க.. பலே ஸ்கெட்ச்!
தனிமனித இடைவெளியை பின்பற்றி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வினால் மாணவர்கள் மன அழுத்தத்தில் உள்ளதாகவும், இதனால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அறிவிப்பு, அமைச்சரின் பேட்டி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கருத்து மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. தமிழக அரசு எப்போதும் மாணவர்களை குழப்பத்திலேயே வைத்துள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே போல சைதாப்பேட்டை பஜார் சாலையில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.