ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்.. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பறந்த உத்தரவு
சென்னை: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை, மாணவர்களின் கற்றல் அனுபவத்தை புதுமையான வழிகளில் மேம்படுத்தும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் படைப்பாற்றலையும் அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ஆசிரியர்களை தேர்வு செய்து பாராட்ட பள்ளிகல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கற்றல் அனுபவத்தை புதுமையாக கொண்டு வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலை அங்கீகரிக்கவும், அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கவும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டிருக்கிறது. இப்படி பாராட்டுவதன் மூலம் ஆசிரியர்களின் புத்தாக்க முயற்சிகளுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைக்கும். அத்துடன் மற்ற ஆசிரியர்கள் இவர்களைப் பின்பற்றித் தங்கள் கற்பித்தல் முறையை மேம்படுத்த விரும்புவார்கள் என்பதால் அரசு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதன்படி, சிறந்த மற்றும் புதுமையான கற்றல் உத்திகளை வகுப்பறையில் வெற்றிகரமாகச் செயல்படுத்திய ஆசிரியர்கள் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். புதிய கற்பித்தல் துணைக்கருவிகள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், விளையாட்டு அடிப்படையிலான கற்றல் போன்ற ஆக்கப்பூர்வமான முறைகளைக் கையாள்வோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
இப்படி சிறப்பான ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அதிகாரப்பூர்வமாகப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இது அவர்களின் பணிப்பதிவேட்டில் சேர்க்கப்படும் என்பதால், அவர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
புதுமையான கற்றல் உத்திகள்
ஆசிரியர்கள் பொதுவாக வகுப்பறையில் கரும்பலகைகளில் பாடம் நடத்துவதை தாண்டி, பாடங்களை வெறுமனே வாய்மொழியாகச் சொல்லிக் கொடுப்பதற்குப் பதிலாக, செய்முறைப் பயிற்சி, குழு விவாதம், மாதிரி உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் மூலம் மாணவர்களைக் கற்றுக்கொள்ளச் செய்யும் வேலைகளை செய்கிறார்கள். சிக்கலான கருத்துக்களை எளிதாக்க, நாடகம், கதைசொல்லல் அல்லது பாட்டு வடிவத்தைப் பயன்படுத்தவும் செய்கிறார்கள். அதேபோல் மாணவர்களே தங்கள் சொந்த வேகத்தில் கற்றுக்கொள்ள அனுமதிப்பது மற்றும் அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க வழிகாட்டுகிறார்கள். சில பள்ளிகளில் ஆசிரியர்கள் உள்ளூர்ச் சூழல், தொழிற்சாலைகள் அல்லது வரலாற்று இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று நேரடியாகப் பாடங்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும் செய்கிறார்கள்.
இவ்வகை ஆசிரியர்களின் சிந்தனை திறன் மாணவர்களின் கல்வி பயணத்தை வளப்படுத்துவதோடு, சக ஆசிரியர்களையும் இதுபோல் செய்ய தூண்டும் வகையில் செயல்படுவதையும் ஊக்குவிக்கிறது. இதனை செயல்படுத்தும் விதமாக நடப்பு கல்வியாண்டு (2025-26-ம் ஆண்டு) முதல் ஆண்டுதோறும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் மாவட்டத்துக்கு 10 ஆசிரியர்களை தேர்வு செய்து இந்த சான்றிதழ் வழங்க முடிவு செய்திருக்கின்றனர்.
மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு மாவட்ட அளவில் இந்த ஆசிரியர்களை தேர்வு செய்து சான்றிதழ் வழங்கும். இந்த குழுவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் அல்லது அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஆகியோர் கொண்ட உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். 38 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்துக்கு 10 ஆசிரியர்கள் வீதம் என மொத்தம் 380 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications