சத்துணவு அமைப்பாளர்... சமையல் உதவியாளர்...தேர்வு நடைமுறை நிறுத்தி வைப்பு!!
சென்னை: தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் தேர்வுகளை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ''தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன.

இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால், நேர்காணல் தேர்வு பணிகளில் மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருக்கும் 63,412 பள்ளி சத்துணவு மையங்களில் தினமும் 46 லட்சம் மாணவர்கள் உணவருந்தி வருகின்றனர். இந்த சத்துணவு மையங்களில் 41 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இன்னும் இந்த மையங்களில் 12 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
இது குறித்து சமீபத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை செயலாளர் மதுமதி வெளியிட்டு இருந்த அரசாணையில், ''ஒவ்வொரு ஆண்டும் சத்துணவு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பத்தாரர்களை அழைத்து நேர்முகத் தேர்வு நடத்த வேண்டியது கட்டாயமாகிறது'' என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications