மகளிருக்கு அடுத்த குட் நியூஸ்.. புதிதாக 4 இடங்களில் வரும் தோழி விடுதி.. டெண்டர் கோரிய தமிழக அரசு!
சென்னை: தமிழ்நாட்டில் சொந்த ஊரில் இருந்து வேறு ஊர்களுக்கு பணிக்கு செல்லும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள தோழி விடுதிகளை உதகை, திருப்பத்தூர், திருவாரூர் மற்றும் வீர சோழபுரம் பகுதிகளில் கட்டுவதற்காக தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கிறது.
தமிழ்நாட்டில் சொந்த ஊரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வேலை செய்யும் பெண்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்காக, தமிழக அரசு சார்பாக தொடங்கப்பட்ட திட்டம் தான் தோழி விடுதி. சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் தோழி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த திட்டம் சென்னைக்கு வந்து பணியாற்றும் பெண்களுக்கு உதவியாக இருந்தது.

இந்த நிலையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிதாகக் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ரூ.77 கோடியில் தோழில் விடுதிகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் மார்ச் 8ஆம் தேதியான மகளிர் தினத்தன்று 12 இடங்களில் ரூ.72 கோடி மதிப்பீட்டில் மகளிருக்கான தோழி விடுதிகள் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 700 படுக்கைகளுடன் கூடிய புதிய தோழி விடுதிகள் அமைய உள்ளதாக தெரிவித்திருந்தார். 24 மணி நேரப் பாதுகாப்பு, பயோ மெட்ரிக் நுழைவு முறை, வைஃபை வசதி, ஆர்ஓ முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் உதகை, திருப்பத்தூர், திருவாரூர், வீர சோழபுரம் உள்ளிட்ட 4 பகுதிகளில் தோழி விடுதிகளைக் கட்டுவதற்கான டெண்டரை தமிழக அரசு கோரி இருக்கிறது. இதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் கட்டுமான பணிகளை தொடங்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே மகளிருக்கான உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவற்றைச் சிறப்பாகச் செய்து வருகிறது.
அந்த பட்டியலில் தோழி விடுதி திட்டத்தையும் சேர்க்க வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. அதற்காகவே தோழி விடுதி திட்டத்தை விரிவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனால் டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்த சில மாதங்களில் தோழி விடுதிகளைத் திறந்து வைக்க பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலேயே அதிகளவிலான பெண்கள் பணிக்கு செல்வது தமிழ்நாட்டில் தான். இதனால் பணிக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் தோழி விடுதி. இதனை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தமிழக அரசு அடுத்தடுத்து விரிவுபடுத்தி வருவது பணிக்கு செல்லும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications