கதிகலங்கும் கேரளா..மூளையை தின்னும் அமீபா..அறிக்கை விட்ட எடப்பாடி பழனிசாமி! அரசு கொடுக்கும் வார்னிங்
சென்னை: கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில், கேரளா முழுவதும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருந்த நிலையில், தமிழக அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
பறவை காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பாதிப்பை தொடர்ந்து தற்போது கேரளாவை மற்றொரு நோய் ஆட்டுவித்து வருகிறது. மூளையை தின்னும் அமீபாவுக்கு இதுவரை மூன்று உயிர்கள் பலியாகி இருக்கும் நிலையில் கேரளாவில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

அரிதினும் அரிதான மூளையை தின்னும் அமீபாவால் கடந்த சில நாட்களில் மூன்று பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், கேரளா " brain eating ameiba" என பொதுமக்கள் அதிகளவில் கூகுளில் தேடி வருகின்றனர். நோய்த்தொற்று கண்டறியப்பட்ட மூன்று பேருமே உயரிழந்திருக்கின்றனர். கோழிக்கட்டை சேர்ந்த சிறுவன், கண்ணூரைச் சேர்ந்த தட்சிணா, மலப்புரத்தைச் சேர்ந்த ஃபட்டுவா ஆகியோர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் அனைவருமே நீர் நிலைகளில் குளித்த பிறகு அவர்களுக்கு தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்குப் பிறகு அவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த வகை அமீபா வெப்பமான நன்னீர் ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகளில் வசிக்கக் கூடியவை என தெரிய வந்திருக்கிறது. மூக்கு வழியாக மூளைக்குச் சென்று மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்தும் அமீபாவால் பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு மரணம் நிகழும் எனக் கூறுகின்றனர். மேலும் அருகிலும் அரிதாக குடிநீரில் கூட இந்த வகை அமீபா உருவாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென தமிழக எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில்,"கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகைய பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும்.
அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தை செலுத்துமாறு இந்த திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்." என கூறியிருந்தார்.
இந்நிலையில் அமீபா தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் இன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் 'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற மூளையைத் தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும்.
நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications