செம்ம குட்நியூஸ்.. வேறலெவலில் மாறப்போகும் உழவர் சந்தைகள்.. ஸ்டாலின் எடுத்த புதிய முடிவு
சென்னை: உழவர் சந்தைகளை மேம்படுத்தும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கோவை, மதுரை, சேலம், திருப்பூர் உள்பட 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க 8.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்தால் தான் அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்கும் என்ற உன்னதநோக்கில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியால் 1999 ஆம் ஆண்டு உழவர் சந்தைகள் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டம் தற்போது வரை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுகிறது.

முன்பு வியாபாரிகள், இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் காய்கறிகளை சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்றனர். ஏழைகளுக்கு காய்கறிகள் உரிய விலையில் கிடைக்கவில்லை. அதேநேரம் விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைக்கவில்லை. இதை எப்படி சரிசெய்வது என்று யோசித்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1999 ஆம் ஆண்டு கொண்டு வந்த திட்டம் தான் உழவர் சந்தை திட்டம். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், தேங்காய் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு உழவர் சந்தை மூலம் விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.
1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி, நேரு பிறந்த நாளன்று முதல் உழவர் சந்தையை மதுரை அண்ணா நகரில் கருணாநிதி தொடங்கி வைத்தார். சென்னை பல்லாவரத்தில் 100 ஆவது உழவர் சந்தையை கருணாநிதி வைத்தார். தமிழகம் முழுவதும் 180 உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. இந்த உழவர் சந்தைகள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர்கள் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. உழவர் சந்தைகள் ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கீழ் 4 முதல் 10 ஊழியர்களுடைய கண்காணிப்பில் செயல்படுகிறது. உழவர் சந்தைகளுக்கு விவசாயிகளை காய்கறிகளை கொண்டு விற்பனை செய்ய அவர்களுக்கு கருணாநிதி சில சலுகைகளையும் அறிமுகம் செய்யும் போதே வழங்கினார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு உழவர் சந்தையிலும் குறைந்தபட்சம் 25 டன் முதல் 150 டன் வரை காய்கறிகள் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஓசூர், மதுரை, திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உழவர் சந்தைகள் மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றன. திமுக ஆட்சி மாறி அதிமுக ஆட்சி வந்த போதும், உழவர் சந்தை திட்டம் சிறப்பாகவே செயல்படுத்தப்பட்டது.
கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பதை தடுக்க சந்தையின் 4 இடங்களில் உழவர்சந்தை நிர்ணயித்த விலைப்பட்டியல் பலகை வைக்கப்படுகின்றன. உழவர் சந்தை விலைகளை அதற்காக நியமிக்கப்பட்ட குழு நாள்தோறும் நிர்ணயிக்கிறது இதனால் உழவர் சந்தைகளில் மக்கள் காய்கறிகள் வாங்க இன்றுவரை ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உழவர் சந்கைளை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கோவை, மதுரை, சேலம், திருப்பூர் உள்பட தமிழகத்தின் முக்கியமான 25 உழவர்சந்தைகளை மேம்படுத்தி புதுப்பிக்க 8.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோவை, மதுரை, சேலம், திருப்பூர் உள்பட தமிழகத்தின் முக்கியமான 25 உழவர்சந்தைகளில் குடிநீர் இணைப்பு, கழிவறை வசதி, நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதன்மூலம் ஏற்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications