"சம வேலை சம ஊதியம்" ஆசிரியர்கள் புத்தாண்டை உவகையுடன் கொண்டாடுங்கள்.. குழு அமைத்த மு.க.ஸ்டாலின்!
சென்னை: சம வேலை சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சம வேலை சம ஊதியம் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிதித்துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வித்துறை நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் மாதத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
துணை முதல்வருக்கு நிகராக உதயநிதி ஸ்டாலின்! அன்பில் மகேஷ் பேச்சை வழிமொழிந்த வெள்ளக்கோவில் சாமிநாதன்!
பேச்சுவார்த்தை தோல்வி
இந்த ஊதிய முரண்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த இடைநிலை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அதன்படி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளருடன் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
6ம் நாளாக தொடரும் போராட்டம்
இதனிடையே, போராட்டம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இதுவரை 147 இடைநிலை ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் 6வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
குழு அமைத்த தமிழக அரசு
இந்த நிலையில் சம வேலை சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரை வழங்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சம வேலை சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு நடத்த நிதித்துறை செயலர் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், தொடக்கக் கல்வி இயக்குநர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு ஒத்துழைப்பு
இந்த குழு ஆய்வு செய்து அளிக்கும் பரிந்துரைகளை சம வேலை சம ஊதியம் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2023ம் ஆண்டின் தொடக்கத்தினை உவகையுடன் கொண்டாடுங்கள். மக்கள் வாழ்வை வளம் பெற செய்வதற்கான பெரும் பணியில் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு அமைத்துள்ளது தொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் என்ன முடிவு எடுக்க உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.