கையில் செங்கோல்.. அதிரடியாக பேசிய உதயநிதி ஸ்டாலின்.. விக்கித்து போன பாஜக.. ரசித்து கேட்ட திமுக!
சென்னை: தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் அடிமையாக இருக்காது என்று சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் திமுக மாநில மாணவரணி, மாவட்ட,மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. இந்த மாணவரணி கூட்டத்தில் மொத்தம் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்களுக்கு நம்பிக்கை
இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது ஒரு பொற்கால ஆட்சியாகும். தமிழ்நாட்டில் விடியலுக்கான ஆட்சியை அமைத்து 117 நாட்களுக்குள் இந்த அரசை அனைவரும் பாராட்டி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த மக்களுக்கு தமிழக அரசின் செயல்பாடுகள் கூடுதல் நம்பிக்கை, திருப்தியை எற்படுத்தி இருக்கிறது.

கண்ணியமாக நடக்க வேண்டும்
ஒன்றிய அரசிடம் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்காக ஒன்றிய அரசிடம் அடிமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு நமது தலைவர் சொல்லித்தரவில்லை. இதைத்தான் சட்டமன்றத்தில் எனது கன்னி பேச்சிலும் கூறி இருக்கிறேன். நமது மாநில உரிமைகள் பறிக்கப்படும்போது அதற்காக ஒன்றிய அரசிடம் நாம் கண்டிப்பாக குரல் கொடுக்க வேண்டும்.

போராட்டம்
வருகிற 20-ம் தேதி ஒன்றிய அரசை எதிர்த்து வீடுகளின் முன்பு போராட்டம் நடத்தும்படி திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த போராட்டத்தை நாம் கண்டிப்பாக வெற்றி பெற செய்ய வேண்டும். ஒன்றிய அரசுக்கு எதிராக நமது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அன்பில் மகேஷ்
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ' 100 நாட்களை கடந்து நமது ஆட்சி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. புத்தக பைகளில் முன்னாள் முதல்வர்(எடப்பாடி பழனிசாமி) இருக்கலாம். இதனை மாற்றினால் கூடுதலாக செலவாகும். இந்த நிதியை வேறு திட்டத்துக்கு பயன்பபடுத்தி கொள்ளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையுடன் கூறியுளளார். இப்போதைய நிதிநிலைமையை உணர்ந்து செயல்படும் ஒரு முதல்வர் நமக்கு கிடைத்துள்ளார். தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை விட நமக்கு என்ன பெருமை வேண்டும்' என்று கூறினார்.

தமிழக அரசுக்கு நன்றி
இந்த கூட்டத்தில் சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு, மருத்துவ இடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஒன்றிய அரசின் ஒப்புதலை பெற்றது, அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைப்பு, மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஆகியவற்றுக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications