வள்ளலார் சபை சனாதன வைதீகத்துக்கு எதிரானது.. ஹைகோர்ட் தீர்ப்பு தந்தது ஆளுநர் ரவிக்கு தெரியுமா?
சென்னை: வடலூர் வள்ளலார் சபை என்பது சனாதன தர்மத்தைப் பின்பற்றக் கூடிய வைதீகத்துக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்திருப்பதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவாரா? என பெரியாரிஸ்டுகள் கேள்வி எழுப்புகின்றனர்.
வடலூரில் வள்ளலார் 200-வது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் வள்ளலார் என பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வள்ளலார், சனாதன தர்மத்தை மிக கடுமையா எதிர்த்து நிராகரித்தவர். அப்படியான வள்ளலாரை சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என பொய்யாக திரித்து பேசுவதா? என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

வள்ளலார் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு அளித்த இறுதித் தீர்ப்பில், சனாதன வைதீகத்துக்கு எதிரானது வடலூர் வள்ளலார் சபை என கூறப்பட்டுள்ளதையும் சமூக வலைதளங்களில் பெரியாரிஸ்டுகள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
வழக்கு என்ன?: வடலூர் சத்திய ஞான சபையில் சிவன் சிலையை வைத்து வழக்கமாக வைதீக கோவில்களில் நடைபெறும் பிரதோசம் உள்ளிட்ட வழிபாடு நடத்த சபாநாத ஒளி சிவாச்சாரியார் என்பவர் முயன்றார். இதற்கு எதிராக 2006-ம் ஆண்டு தொண்டர் குலப் பெருமான் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், வள்ளலார் வழிபாட்டு மரபுக்கு எதிரானது உருவ வலிபாடு- சிவலிங்க வழிபாடு என தெரிவித்திருந்தார் தொண்டர் குலப் பெருமான். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, அறநிலையத்துறை பரிசீலனை செய்ய உத்தரவிட்டது.
வள்ளலார் சபை குறித்து அறநிலையத்துறை: இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை அளித்த விளக்கத்தில், 1882-ம் ஆண்டு வள்ளலார் சத்திய ஞான சபைக்கு வழிபாட்டு விதிகள் உருவாக்கப்பட்டன. இதில் ஒளி மட்டும்தான் ஏற்றலாம்; அருட்பெரும் ஜோதி, தனி பெரும் கருணை என்பது மட்டும் ஒலிக்க வேண்டும் என வரையறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேதம், இதிகாசம், புராணம், சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம், என மத நடவடிக்கைகள் கூடாது என்பதும் வள்ளலார் கோட்பாடு. ஆகையால் உருவ வழிபாடு, மத வழிபாட்டுக்கு அனுமதி கிடையாது என அறநிலையத்துறை தெரிவித்தது.
மேல்முறையீடு: சென்னை உயர்நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவாச்சாரியார் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை 2010-ல் விசாரித்த அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதி சந்துரு அளித்த தீர்ப்பில், வள்ளலார் ஞான சபையானது எப்படி எல்லாம் சனாதனத்துக்கு எதிரானது என விவரித்துள்ளார். அத்தீர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இத்தீர்ப்புக்கு எதிரான சிவாச்சாரியார் மேல்முறையீடு செய்தார். இம்மேல்முறையீட்டு மனு மீது கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பு என்ன?: வடலூர் வள்ளலார் சபை குறித்து கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், இந்த சபை சனாதன வைதீகத்துக்கு எதிரானது; ஆகையால் உருவ வழிபாட்டுக்கு அனுமதி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இப்படியான திட்டவட்டமான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பற்றி எதுவும் தெரியாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறார் என்பது பெரியாரிஸ்டுகளின் விமர்சனம்.












Click it and Unblock the Notifications