தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நான்காம் தர அரசியல் செய்கிறார்.. சபாநாயகர் அப்பாவு கடும் விமர்சனம்

தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் உள்ளது. குறிப்பாக தமிழக சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே, ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் காலாவதியான கொள்கை என்று விமர்சித்து இருந்தது தமிழக அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் கருத்துக்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என் ரவி நான்காம் தர அரசியல் செய்வதாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:- மாநில ஆளுநர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பணியாற்ற வேண்டியவர்கள். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது.
மதசார்பற்ற நாடு என்பதை மறைத்து, மதசார்புள்ள நாடுதான் என்று திணிப்பது போன்று ஆளுநர்கள் பேசுவது தவறானது. அரசியல் கட்சி பிரமுகர்களை போல ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தமிழக ஆளுநர் பரப்பி வருவதும், திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது என்பது போல சொல்வதும் சரியானது இல்லை.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கையை துரிதமாக தமிழக அரசு எடுத்தது. இது தொடர்பாக ஏதாவது ஆதாரம் இருக்கும் பட்சத்தில் அரசிடமோ, உள்துறையிடமோ அல்லது பிரதமர், குடியரசுத்தலைவரை சந்தித்து தெரிவிக்காமல் நான்காம் தர அரசியலை ஆளுநர் செய்து வருகிறார்.
சட்டத்திற்கு புறம்பாக பேசி நான்காம் தர அரசியல் செய்ய வேண்டாம். இந்தியாவில் மக்களாட்சி தத்துவம் தான் சிறந்தது. மக்களாட்சி தான் நடைபெற்று வருகிறது. நாட்டில் ஓபிசிக்கு கொடுக்கக்கூடிய மருத்துவ படிப்பில், இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது திராவிட அரசுதான். தமிழகத்தில் மட்டும் இருந்த திராவிட மாடல் இந்தியா முழுவதும் சென்று உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications