ராஜ்பவனில் இருந்து சீறிய கார்! அவசர அவசரமாய் டெல்லிக்குச் சென்ற ஆளுநர்! என்ன காரணம்! பரபர பின்னணி!
சென்னை : தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் விஸ்ரூபமெடுத்துள்ள நிலையில், நேற்று முந்தினம் இரவு டெல்லியிலிருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பிய நிலையில், இன்று மாலை மீண்டும் அவசரமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆளுநர் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டது பெரிதும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய நிலையில், பாஜக தமிழக அண்ணாமலை அனுப்பிய புகார் கடிதம் தொடர்பாக பயணம் இருப்பதாக கூறப்பட்டது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆதாவது தமிழக உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு எதிராக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கிளப்பிய போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆளுநருக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அனுப்பிய புகாரில் தமிழக உளவுத்துறை தலைவராக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம் 2018ஆம் ஆண்டில் மதுரை மாநகர கமிஷனராகப் பொறுப்பேற்ற போது போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

டெல்லி மேலிடம்
இதுதான் ஆளுநரின் பயணத்தில் முக்கியவத்துவம் பெற்றதாக கருதப்பட்டது. இதேபோல், குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் விஷயத்தில் பாஜக மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அது தொடர்பாக ஆளுநர் ரவி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தனிப்பட்ட காரணமாக ஆளுநர் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், டெல்லியிலிருந்து பீகார் மாநிலம் செல்லும் ஆளுநர் ஆலயம் ஒன்றில் வழிபாடு செய்ததாகவும் வேறு முக்கிய காரணங்கள் இல்லை என தகவல்கள் வெளியாகின.

மீண்டும் பயணம்
எதிர்பார்த்தபடி பிரதமர் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை ஆளுநர் ரவி சந்தித்து பேசாத நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார் இன்று ஆளுநர் மாளிகையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டவர் நான்கரை மணிக்கு மேல் திடீரென சென்னை விமான நிலையம் சென்றார். மாலை 5.15 மணியளவில் விஷ்தாரா விமானத்தில் டெல்லிக்கு மீண்டும் திடீர் பயணம் செய்த நிலையில், அவரது பயணத்துக்கான காரணம் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகியுள்ளன.

என்ன காரணம்?
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் விஸ்ரூபமெடுத்துள்ள நிலையில், பள்ளியில் கலவரம் மூண்டது. கலவரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, தமிழக டிஜிபி, தலைமை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், தேவைப்பட்டால் தொடர்புடைய பள்ளிக்கு நேரடியாக விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பான பயணமா என பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆனால் ஆளுநர் மாளிகை தரப்பில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications