ஷேப் மாறுகிறது.. ப வடிவ வகுப்பறை இன்று முதல் அமல்! பள்ளிக்கல்வித் துறை செம! கண்ணாடியை திருப்பினால்?
சென்னை: கேரளாவில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கில், 'ப' வடிவில் வகுப்பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அம்மாநிலத்தை போலவே, தமிழ்நாட்டிலும் அதனை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த நடைமுறையானது இன்று முதல் அமலுக்கும் வந்துள்ளது.
இந்த ப வடிவ இருக்கைகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு மாணவரும் கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்க்க முடியும். அத்துடன், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், எளிதான அணுகுமுறை உருவாகுவதுடன், ஆசிரியர்கள் மாணவர்களை உன்னிப்பாக கண்காணிக்க முடியும் என்று நம்பப்படுகிறது..

இதனால், ஆசிரியர்கள் சொல்வதையும் மாணவர்கள் கேட்பதில் இருக்கும் சிரமம் குறையும் என கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. எனவே இருக்கைகள் அமைக்கப்படுவது போல, அதற்கேற்ற காற்றோட்ட வசதி, ஒளிவசதி ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது..
ப வடிவ வகுப்பறைகள்
இந்தநிலையில்தான், தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்கவும், கடைசி பெஞ்ச்' முறையை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த நடைமுறைக்கு அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன.. சினிமாவை பார்த்து பள்ளிக்கல்வித்துறை சீரழிகிறது என்றும், மாணவ-மாணவிகளுக்கு கழுத்து, முதுகுவலி ஏற்படும் என்றும், உடனடியாக 'ப' வடிவ இருக்கை உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
கிளம்பும் எதிர்ப்புகள்
குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 'ப'வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்... முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள்.. அதை விடுத்து ப வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்..
எனவே, வகுப்பறையின் இரு புறமும் அமர்ந்துள்ள மாணவர்கள் கரும்பலகையை பார்த்து எழுதுவதற்கு கழுத்தை ஒருபுறமாக திருப்பி வைத்திருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும்; மாணவர்கள் எதிரெதிராக அமர்ந்திருக்கும் போது கவனச் சிதறல்கள் ஏற்படும் என்பன போன்ற பாதகமான அம்சங்களும் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இன்று முதல் அமல்
இப்படி எதிர்ப்புகள் எதிர்க்கட்சிகளிலிருந்து வலுத்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அந்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவின..ஆனால் அப்படி எந்த உத்தரவையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை என்றும், அது நிறுத்தி வைத்ததாக வரும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் தந்திருந்தனர். இந்நிலையில்தான், 'ப' வடிவில் வகுப்பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டு, அமலுக்கும் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications