பொங்கல் பரிசு ரூ.1000.. டோக்கன் விநியோகம் நாளை தொடக்கம்.. எங்கே வாங்க வேண்டும்? யாருக்கு கிடைக்காது
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000க்கு நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இவை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்படும்.

கடந்தாண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை மற்றும் ரூ.1000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது.
முதலில் பொங்கல் பரிசு தொகுப்பிற்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்ய கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அப்போதே கூறப்பட்டு இருந்தது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதேபோல இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. முதலில் பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் ரொக்கம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இதற்கிடையே பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000க்கு நாளை முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ரேஷ,ன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யப்படும்.. அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பயனாளிகள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பரிசு தொகுப்பைப் பெறலாம்.
சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் ஆகியோருக்கும் இந்த பொங்கல் டோக்கன் வழங்கப்படாது என்பதைத் தமிழ்நாடு அரசு நேற்றே அறிவித்து இருந்தது.












Click it and Unblock the Notifications