மூளையை திண்ணும் அமீபா! சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்! தமிழக அரசு
சென்னை: சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் யாரும் மூளையை உண்ணும் அமீபா குறித்து அச்சப்பட தேவையில்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த அமீபா கொரோனா போல் மற்றவர்களுக்கு பரவாது என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை, வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: "கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோய் பரவும் நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்.சபரிமலை சென்று வந்து 3 நாட்களுக்கு பின் காய்ச்சல், உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

ஆறுகள், குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்கும் போது மூக்கினுள் நீர் செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். கொதிக்க வைத்த நீரை பருகவும்.மலை ஏறும் போது மெதுவாக இடைவெளி விட்டு ஏறவும். கொரோனா தொற்று போல அமீபா பரவாது என்பதால் சபரிமலை செல்வோர் அச்சப்பட தேவையில்லை." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் 1ஆம் தேதி இன்று பிறந்துள்ளதால், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து இன்று மண்டல பூஜை தொடங்கியது. இந்த நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கேரள மாநில சுகாதாரத் துறை சில அறிவுரைகளை வழங்கியது.
அதில் சபரிமலைக்கு வரும் வழியில் ஆறுகளில் குளிக்கும் போது மூக்குக்குள் நீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக இருத்தல் வேண்டும். ஏற்கெனவே உள்ள உடல்நல பிரச்சினைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்வோர் அவற்றை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், அதற்கான ஆவணங்கள், மருந்துகளுடன் பயணிப்பது அவசியம். சபரிமலை யாத்திரை புறப்படும் முன்னர், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

மலை ஏறும் போது மெதுவாக ஏறவும். அது போல் இடைவெளி விட்டு செல்லுங்கள். ஒருவர் பின்னால் ஒருவர் நெருக்கமாக செல்வதை தவிருங்கள். வெந்நீரையே குடியுங்கள். உணவு மட்டுமல்லாமல் எந்த தின்பண்டங்களை சாப்பிடுவதாக இருந்தாலும் அதற்கு முன்னர், கைகளை கழுவ வேண்டும்.
அது போல் குளிப்பதற்கு பயன்படுத்தும் துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிக்க தடை உள்ளதால் பக்தர்கள் சுகாதாரமான கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் மருத்துவமனைகளில் பாம்புக் கடிக்கான விஷ முறிவு மருந்துகள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications