வெயில் “செம காட்டு” காட்டப்போகுதாம்.. அடுத்த 10 நாட்களுக்கு வெளியே போய்டாதீங்க.. வெதர்மேன் வார்னிங்!
சென்னை: சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இந்த கோடையில் முதல்முறையாக வேலூரில் இன்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு மண்டல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வழக்கமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. மார்ச் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதுமே வெயில் கொளுத்தி வருகிறது.
தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்
இந்நிலையில், மக்களுக்கு மேலும் கவலை தரக்கூடிய அப்டேட்டை கொடுத்துள்ளார் தனியார் வானிலை ஆர்வலர் வெதர்மேன் பிரதீப் ஜான், அடுத்த 10 நாட்களுக்கு அதிக வெப்பமாக இருக்கும். வேலூர் தொடர்ந்து வெப்பநிலை தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த கோடையில் முதல்முறையாக வேலூரில் இன்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இன்னும் வெப்பமான நாட்கள் வர இருக்கின்றன. சென்னையிலும் இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள் இன்று. அடுத்த 10 நாட்களுக்கு அதிக வெப்பமாக இருக்கும். வேலூர் தொடர்ந்து வெப்பநிலை தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
2 சூழல்கள்
மேலும், "சூழல் 1 (ஓய்வு மற்றும் மழை) - ஏப்ரல் 2வது வாரம் அரிதான குறைந்த காற்றழுத்தம் தமிழ்நாடு அல்லது தெற்கு ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகரப் போகிறது, அதன் காரணமாக வெப்பநிலை குறையும்.
சூழல் 2 (ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் வெப்ப அலை) - ஏப்ரல் 2வது வாரம் அரிதான குறைந்த காற்றழுத்தம் தமிழ்நாட்டிலிருந்து விலகி அனைத்து ஈரப்பதத்தையும் இழுத்துச் சென்று அதிக வெப்பமான வானிலையைக் கொண்டு வரும்.
சூழல் 1 நடக்கும் என்று நம்புகிறோம், ஏப்ரல் 2/3 வாக்கில் நமக்குத் தெளிவு கிடைக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
வெயிலின் தாக்கம் அதிகம்
முன்னதாக இன்று வெயிலின் தாக்கம் சில மாவட்டங்களில் மிக அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார். ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வடமாட்டவங்களில் இன்று வெயில் மிக அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.
வேலூரில் இன்று அல்லது நாளை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்தார். கடற்பகுதியில் இருந்து தொலைவில் உள்ள சென்னையின் உள் பகுதிகளிலும் இன்று கடுமையான வெப்பம் நிலவும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் கணித்திருந்தார்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இன்று வெயில் அதிகமாக இருக்கும் என்றும் இந்த நாள் இந்த ஆண்டின் ஹாட்டஸ்ட் நாளாக இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications