தமிழ்நாடு தான் பெஸ்ட்! பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம்.. ஆளுநர் ரவி புகழாரம்
சென்னை: தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இதற்கிடையே சென்னை ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருப்பதாகப் புகழ்ந்து பேசினார். மேலும், வடகிழக்கு மாநில பெற்றோர்கள் தங்கள் பெண்களைத் தமிழகத்திற்கு அனுப்பும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நமது நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் ஆளும் மாநில அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே ஒரு மோதல் போக்கே நிலவி வருகிறது. தமிழ்நாடும் கூட அதற்கு விதிவிலக்கு இல்லை.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போது கூட ஆளுநர் உரையைப் படிக்காமலேயே கவர்னர் ரவி புறப்பட்டுச் சென்றார். தொடக்கத்தில் தேசிய கீதத்தைப் பாடவில்லை என்று சொல்லி அவர் கிளம்பிச் சென்றிருந்தார்.
ஆளுநர் ரவி:
இதற்கிடையே இன்று நடந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான ஒரு மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதாகப் பேசியுள்ளார். இதனால் தமிழகத்திற்குப் பெண்களைப் படிக்க அனுப்பும் வடமாநில பெற்றோர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாகவும் ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.
பாதுகாப்பான மாநிலம்:
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தினத்தை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, "தமிழ்நாடு பாதுகாப்பான ஒரு மாநிலமாக இருக்கிறது. இங்குள்ள மக்கள் சிறப்பானவர்களாக உள்ளனர். இதன் காரணமாகவே வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் தமிழகத்தை தங்கள் சொந்த மாநிலமாகவே ஆக்கிக்கொண்டனர். ஏனென்றால் இங்குள்ள மக்கள் இனிமையானவர்களாக உள்ளனர். இங்குள்ள மொழி, கலாச்சாரம் தொன்மையானதாக இருக்கிறது. இது அற்புதமாக இருக்கிறது. அதுவே தமிழகத்தின் சிறப்பு.
வடகிழக்கு மாநில பெற்றோர்கள்:
குறிப்பாகத் தங்கல் பெண்களைப் படிக்க அனுப்பும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் பெண்கள் தமிழகத்திற்குச் செல்கிறார்கள் என்பதால் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர். தமிழ்நாடு என்றால் பிரச்சினை இல்லை என்றே அவர்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே தமிழ்நாட்டுக்கு அதிகளவில் பெண்கள் படிப்பிற்கு வருகிறார்கள்.
இங்கு இருப்பதைப் போன்ற ஒரு பாதுகாப்பான சூழல் டெல்லியில் இல்லை. டெல்லிக்குச் சென்றால் தங்கள் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதில்லை" என்று அவர் தெரிவித்தார்.
முக்கியத்துவம்:
ஆளுநர் ரவி கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தச் சூழலில் தமிழ்நாடு மிகவும் ஒரு பாதுகாப்பான மாநிலம் என்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தைகளைத் தமிழகத்திற்கு அனுப்பும் போது பாதுகாப்பாக உணர்வதாக ஆளுநர் ரவி பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications