"திராவிடம்".. நோட் பண்ணீங்களா.. பாஜக பத்தி கேட்டதும்.. அதிமுகவை விட்டுக்கொடுக்காம பேசிய ஸ்டாலின்!
சென்னை: பாஜக பற்றிய கேள்வி ஒன்றுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை விட்டுக்கொடுக்காமல் பேசியது வைரலாகி வருகிறது. அதிமுகவினர் இடையே அவரின் பேச்சு வரவேற்பை பெற்றுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி திமுக பெரும் சாதனை படைத்துள்ளது. 952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது. 2360 நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது.
அதேபோல் 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக மொத்தமாக கைப்பற்றி வென்றுள்ளது. அதிமுக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல், எந்த மேயர் பதவியையும் பெற முடியாத அளவிற்கு மோசமான தோல்வியை தழுவி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் தேர்தல் வெற்றி பற்றி பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், இந்த வெற்றியை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான் வைத்தேன். எங்கள் கூட்டணிக்கு முழு வெற்றியை தாருங்கள், உங்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம் என்று கூறினேன். அந்த வெற்றியை வழங்கி இருக்கிறார்கள். 9 மாத கால ஆட்சிக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் இந்த வெற்றி. எங்கள் வாக்குறுதிகளை நாங்கள் காப்பாற்றுவோம்.

திமுக வெற்றி
இந்த வெற்றியை பார்த்து நான் கர்வம் கொள்ளவில்லை. மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காக்க வேண்டும் என்ற உறுதிதான் எனக்கு வந்துள்ளது. பொறுப்பை உணர்ந்து நான் கண்டிப்பாக செயல்படுவேன். இந்த வெற்றியை நாம் முறையாக கொண்டாட வேண்டும். மக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல், புகார் எதுவும் வராமல் அமைதியாக கொண்டாட வேண்டும். இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த மக்களுக்கு மீண்டும் நன்றி சொல்கிறேன்.

அதிமுக பற்றி கேள்வி
இது திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி. அதிமுகவின் கோட்டை என்று சொன்ன கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியை பெற்றுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். இதையடுத்து அங்கு இருந்த செய்தியாளர் ஒருவர், அதிமுகவை விட பாஜக முந்துகிறதா, சில இடங்களில் பாஜக இரண்டாம் இடம் பெற்றுள்ளதே என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் "அப்படி எல்லாம் இல்லை, அப்படி சொல்ல முடியாது.

அதிமுக பாஜக
சில இடங்களை வேட்பாளர்களை மனதில் வைத்து வாக்கு அளிப்பார்கள். சில இடங்களை கட்சிகளை மனதில் வைத்து வாக்களிப்பார்கள். அதை எல்லாம் இப்போது பார்க்க முடியாது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வரட்டும் பின்னர் என் விளக்கத்தை கொடுக்கிறேன்" என்று குறிப்பிட்டார். அதாவது பாஜக இரண்டாம் இடம் வந்துவிட்டது என்று கூறுவதை தவிர்த்து, அதிமுகவை விட்டுக்கொடுக்காமல் முதல்வர் ஸ்டாலின் பேசினார். பாஜகவை தூக்கி பேசி, அதிமுகவை இகழ்ந்து பேசாமல் நாசுக்காக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
Recommended Video

திராவிட பாசம்
தேர்தல் தோல்வியால் முடங்கி போய் இருக்கும் அதிமுக தொண்டர்களை இந்த பதில் கவர்ந்து உள்ளது. பாஜக நிர்வாகிகள் பலர் இனிமேல் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று கூறி வரும் வேளையில்தான் அதிமுகவை பாஜக முந்திவிட்டது என்று சொல்ல முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் சொல்லிய விதம் இந்த விசயத்தில் அதிமுகவிற்கு ஆதரவாகவே இருந்தது. என்னதான் மோதல் இருந்தாலும் திராவிட கட்சிகள் இடையிலான இணக்கம் இது, திராவிட பாசம் இது என்று அதிமுக, திமுகவினர் சிலர் இணையத்தில் இதை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications