ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. ஆதிக்கம் செலுத்தப் போவது யார்? காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ளது.
தமிழ்நாட்டில் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பிற்குப் பிறகு, 2019இல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை.
இதையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு - காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளைக் கொண்ட வாக்கு பெட்டிகள் அனைத்தும் மாநிலம் முழுவதும் உள்ள 74 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு பெட்டிகள் உள்ள இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் பணிகளில் மொத்தம் 31,245 அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர். கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் வேட்பாளர், முகவர் தவிர பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
7 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்.. 17,930 பேருக்கு கொரோனா பாதிப்பு
காலை 8 மணி முதலில் முகவர்கள் முன்னிலையில் நிற அடிப்படையில் வாக்குச் சீட்டுகள் பிரிக்கும் பணி நடைபெறும். அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் உடனுக்கு உடன் முடிவுகளை அறிவிக்குமாறு தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மாநில தேர்தல் ஆணையத்தின் தளமான tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்படவுள்ளது.