"தொற்று இன்னும் குறையவில்லை".. 11 மாவட்டங்களில் என்னென்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள்.. முழு விபரம்!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதையடுத்து இன்று புதிய தளர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஊரடங்கு 14-6-2021 முதல் 21-6-2021 காலை 6-00 மணி நீட்டிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
11 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 27 மாவட்டங்களில் டாஸ்மாக் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
கொரோனா பரவல் அதிகம்
நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டு சில தளர்வுகள் மட்டுமே அமலுக்கு வந்துள்ளன. பெரிய அளவில் இங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவில்லை.
கட்டுப்பாடு
இந்த 11 மாவட்டங்களில் இ பதிவு முறை அமலில் இருக்கும். வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.
தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
இ பதிவு
மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர், எனினும் இவ்வகைக் கடைகள் திறக்க அனுமதியில்லை.
மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump sel) பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
வேறு தளர்வுகள்
இது போக 11 மாவட்டங்களில் கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.