வயநாடு நிலச்சரிவில் சிக்கி.. கட்டுமான பணிக்கு சென்ற தமிழர் பலி..நிதி உதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் நீலகிரியை சேர்ந்த கட்டுமான தொழிலாளியும் இந்த இயற்கை பேரிடரில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அளித்துள்ளார்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிராவணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா 2 கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த திரு.காளிதாஸ் (வயது 34) த/பெ.காளி என்பவர் கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தபோது இன்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த திரு.காளிதாஸ் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த திரு. காளிதாஸ் அவர்களின் குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் ஆரம்பத்தில் பெரியளவில் மழை இல்லை. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கேரளாவில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த நிலையில், தான் கேரளாவின் வயநாட்டில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு எற்பட்டது. வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்த நிலையில் நள்ளிரவிலும் மழை நிற்காமல் பெய்தபடி இருந்தது.
இதனால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. அதன் தொடர்ச்சியாக நிலச்சரிவும் ஏற்பட்டது. இன்று அதிகாலை 2 முறை சூரல்மலை பகுதியில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டகை, மேட்டுப்பட்டி, சூரல்மலை உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்தன. சூரல்மலை பகுதியில் அடுத்தடுத்த நிலச்சரிவு ஏற்பட்டதில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கின.
இந்த வீடுகளில் சிக்கிய 1,000-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகளில் கேரளா மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதில் இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணியானது நடந்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் இருந்தும் பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications