திமுக அரசு மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.. திருமண நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: திமுக அரசு மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். நான் எங்கு சென்றாலும் மக்கள் அக்கறையுடன் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுகவினரே எடப்பாடி பழனிச்சாமியுடன் பேசாத போது திமுக எம்.எல்.ஏக்கள் தன்னோடு பேசுவதாக புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் கிண்டலடித்துள்ளார்.
பதிவுத்துறையில் இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலமும் செய்யாத ஒன்றை தமிழ்நாடு அரசு செய்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பாராமல் அனைவருக்காகவும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அமைச்சர் மூர்த்தி- செல்லம்மாள் தம்பதியின் மூத்த மகன் தியானேசுக்கும், திருச்சி சிவக்குமார்- பொன்னம்மாள் தம்பதியின் மகள் ஸ்மிர்தவர்ஷினிக்கும் திருமணம் மதுரை பாண்டி கோவில் ரிங்ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தி.மு.க. இளைஞரணி செய லாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

திமுக அரசு மீது நம்பிக்கை
அப்போது அவர் திமுக அரசு மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார். போகும் இடங்களில் எல்லாம் மக்கள் அலைகடலென திரண்டு வந்து வரவேற்பு அளிக்கின்றனர். அவர்களுக்கு தேவையானவற்றை மனுக்களாக எழுதி கொடுக்கின்றனர். தேர்தல் நடைபெறும் முன்பே நாம் பெற்ற மனுக்களில் 70 சதவிகிதம் நிறைவேற்றி விட்டோம். அந்த நம்பிக்கையில் மீண்டும் மனு அளிக்கின்றனர்.

என் மீது அக்கறை
திமுக ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாது என் மீது அக்கறையும் அதிகரித்து வருகிறது. நான் எங்கு சென்றாலும் நல்லா இருக்கீங்களா? என்று கேட்டு உங்க உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் என்று அக்கறையோடு விசாரணை செய்கின்றனர்.

உழைக்கும் அமைச்சர்கள்
மதுரையில் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் விரைவில் திறக்கப்பட்ட உள்ளது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், கலைஞர் நூலகத்தின் கட்டுமான பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றார். திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மக்களுக்காக ஓயாமல் உழைத்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் நலனுக்காக பகலிரவு பாராமல் உழைத்து கொண்டிருக்கிறோம். அனைவருமே சிறந்தவர்கள்தான் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி
திமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர் தன்னிடம் பேசிவருவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,அவர் கட்சிக்காரர்களே அவருடன் பேசுவதில்லை, அந்த கட்சி ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என பிளவுபட்டுக் கிடக்கிறது என்றார்.

படுதோல்வி
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலில் படு தோல்வி என தொடர்ந்து தோல்விகளை மட்டுமே அந்த கட்சி சந்தித்து வருகிறது. இதில் அவரது கட்சிக்காரர்களே அவருடன் பேசாத போது திமுக எம்.எல்.ஏக்கள் தன்னோடு பேசுவதாக புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது அவர் வகிப்பதே டெம்பரவரி பதவி. அதுவே உறுதியாகாத போது திமுகவை பற்றி விமர்சிக்கிறார் என்று ஸ்டாலின் கிண்டலடித்தார். எடப்பாடி பழனிச்சாமி பற்றி விமர்சனத்திற்கு அரங்கத்தில் இருந்த அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.












Click it and Unblock the Notifications