ஸ்டாலினின் ஆசை.. எகிறும் எதிர்பார்ப்பு.. சுடச்சுட ரெடியாகும் பி.டி.ஆர் பட்ஜெட்.. கைகொடுக்கும் பா.ம.க?
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்து 50 நாட்களை கடந்து செல்கிறது. தான் பதவியேற்ற முதல் நாளிலேயே முத்தான 5 திட்டங்களை அறிவித்து தடம் பதித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதுமட்டுமின்றி நேருக்கு நேர் அச்சுறுத்தலாக இருந்த கொரோனா தடுப்பு பணிகளை மிக சிறப்பாக கையாண்டுள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது ஆட்சி பீடத்தில் அமர்ந்த தி.மு.க இப்போது கொரோனாவை அதிரடியாக கட்டுப்படுத்தி பொதுமக்கள் மட்டுமின்றி எதிர்கட்சியினரின் பாராட்டுகளையும் அள்ளியது.
தொடக்கத்திலேயே மக்களின் நன்மதிப்பை பெற்ற நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த கவனம் முழுவதும் தமிழ்நாடு பட்ஜெட்தான் நோக்கிதான் இருக்கிறது. முதல்வர் மட்டுமின்றி மக்களும், எதிர்க்கட்சிகளும் தி.மு.க. அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

எகிறும் எதிர்பார்ப்பு
பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 அறிவிப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்னும் அறிவிப்பு வரும் என்று மக்கள் காத்திருந்த நிலையில் இதுவரை தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிடவில்லை. இது தொடர்பாக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையிலும் எதுவுமில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் ''எல்லாம் இப்பவே சொல்ல முடியுமா.. பொறுத்திருந்து பாருங்கள்'' என்று பட்ஜெட் நோக்கி கைநீட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

செதுக்கி வரும் பி.டி.ஆர்
இதனால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இதுவரை எந்த அரசும் தாக்கல் செய்யாத சூப்பரான பட்ஜெட்டாக முதல் பட்ஜெட் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் அறிவுறுத்தி இருக்கிறார். இதனால் பட்ஜெட்டில் உள்ள ஒவ்வொரு திட்டங்களையும், அம்சங்களையும் பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.

அனைவரின் கருத்துக்கள்
ஏற்கனவே நிதி சார்ந்த அம்சங்களை கரைத்து குடித்தவர் என்றாலும், முதல்வருக்கான பொருளாதார குழுவில் உள்ள அறிஞர்கள், நிதித்துறை அதிகாரிகள், தமிழக திட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் என அனைத்து பொருளாதார வல்லுநர்களின் கருத்துக்களையும் கவனத்துடன் கேட்டறிந்து பட்ஜெட்டை சுடச்சுட தயார் செய்து வருகிறார் பி.டி.ஆர். இது தவிர பா.ம.க நேற்று தாக்கல் செய்த பொது நிழல் நிதி அறிக்கையையும் அதிகாரிகளிடம் கேட்டு வாங்கி பார்த்து வருகிறாராம்.

பொது நிழல் நிதி அறிக்கை அம்சங்கள் ஆய்வு
122 தலைப்புகளில் பா.ம.க தாக்கல் செய்த பொது நிழல் பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீடு, ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை, தமிழ்நாட்டில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 478 விஷயங்கள் குறித்த பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்கின்றன. இது குறித்து அதிகாரிகளுடன் கேட்டு அறிந்து, தீவிரமாக ஆராய்ந்து வருகிறாராம் நிதி அமைச்சர்.

பா.ம.க சாயல் இருக்குமா?
பா.ம.க தாக்கல் செய்த பொது நிழல் பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு திட்டங்கள் பலவற்றுக்கும் தொடர்பு உள்ளதால் பா.ம.க நிழல் பட்ஜெட்டில் உள்ள சில அம்சங்கள் தமிழ்நாடு பட்ஜெட்டில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனாலும் தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த சாயல் இருக்குமா? இல்லையா? என்பது பட்ஜெட் தாக்கல் செய்த பிறகே தெரியவரும். ஒட்டுமொத்தத்தில் முதல்வர் ஆசைப்பட்டபடி தமிழ்நாடு மக்களே அசந்து பார்க்கும் வகையில் பி.டி.ஆரின் முதல் பட்ஜெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications