எரியுது மாலா..ஃபேனை 12 ஆம் நம்பர்ல வையி! மழை காலத்திலும் குறையாத வெயில்! படக்கென அதிகரித்த மின் தேவை
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள போதிலும், வெயிலின் தாக்கம் குறையாமல் தொடர்கிறது. இதன் விளைவாக, தமிழ்நாட்டில் தினசரி மின்சார தேவை மீண்டும் அதிகரித்து 18,000 மெகாவாட்டை கடந்துள்ளது. பொதுவாக பருவமழை காலங்களில் மின் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இம்முறை நிலைமை மாறுபட்டுள்ளதால், கூடுதல் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதலுக்கு மின்வாரியம் தயாராகி வருகிறது.
கோடைக்காலத்தில் தமிழகத்தில் எப்போதும் மின் தேவை அதிகரிக்கும் ஏசி ஃபேன் உள்ளிட்ட அவற்றின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் மின் நுகர்வு பல மடங்கு அதிகரிக்கும். இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் மின் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மின் தேவை 18 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. இதுதொடர்பாக மின்வாரியத்தின் புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 17,000 மெகாவாட்டாகவே இருந்து வந்தது.
தமிழக மின் தேவை
கோடை காலங்களில் இது 18,000 முதல் 19,000 மெகாவாட்டாக உயர்வது வழக்கம். கடந்த மே மாதத்தில், அதிக வெப்பத்தால் மாநிலம் முழுவதும் மின் பயன்பாடு வரலாற்றில் முதல்முறையாக 20,000 மெகாவாட்டைத் தாண்டியது. ஆனால் இந்தாண்டு கோடையில் அவ்வப்போது பெய்த மழையால், மின் தேவை எதிர்பார்த்த அளவு வரை அதிகரிக்கவில்லை. அதேபோல், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால், வீடுகளில் ஏர் கண்டிஷனர், குளிர்சாதனப் பொருட்களின் பயன்பாடு குறைந்தது. இதனால் மின்தேவை 12,000 முதல் 13,000 மெகாவாட்டுக்குள் நிலைத்து இருந்தது.
மின்தேவை அதிகரிப்பு
இந்தாண்டு அக்டோபர் இறுதி மற்றும் நவம்பர் தொடக்கத்தில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்திருந்தாலும், வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. நவம்பர் 1 அன்று மாநிலத்தின் மின்தேவை 17,380 மெகாவாட்டாக இருந்தது. அடுத்த நாள் சற்று குறைந்து 15,470 மெகாவாட்டாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் அதிகரித்து நவம்பர் 3-ஆம் தேதி 17,000 மெகாவாட்டைத் தாண்டி, நவம்பர் 4-ஆம் தேதியில் 18,000 மெகாவாட்டை கடந்து சென்றது.
வடகிழக்கு பருவமழை
மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், "பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்கள் மழைக்காலம் என்பதால் மின் தேவை குறைவது வழக்கம். ஆனால் இம்முறை நிலைமை மாறிவிட்டது. பகலில் வெயிலும் இரவில் வெப்பமும் அதிகமாக இருப்பதால் மின் பயன்பாடு குறையவில்லை," என்றனர். பொதுவாக மழைக்காலங்களில் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்படும். ஆனால் இம்முறை மின் தேவையை பூர்த்தி செய்ய அவை மீண்டும் முழு திறனில் இயங்கத் தொடங்கியுள்ளன. மேலும், காற்றாலை மின் உற்பத்தி பருவம் அக்டோபரில் முடிவடைந்ததால், தற்போது அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் பாதியாகக் குறைந்துள்ளது.
மின் விநியோகம்
முன்பு தினமும் சராசரியாக 3,500 மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைத்த நிலையில், தற்போது அதில் அரை அளவுக்கு கூட கிடைக்கவில்லை. இதனால் மின்விநியோகத்தில் சிறிய அளவிலான அழுத்தம் உருவாகியுள்ளதாகவும், வானிலை மாறி மழை தீவிரமாகிவிட்டால் இதிலே மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் வானிலை தனித்தன்மையுடன் இருக்கிறது. ஒரு புறம் மழை பெய்தாலும், மற்றொரு புறம் வெப்பம் குறையாமல் இருப்பது மின்சார தேவையை மீண்டும் உயர்த்தியுள்ளது. இதனால் மின்வாரியம் அனல் மின் உற்பத்தியை அதிகரித்து, மின் விநியோகத்தில் தடையில்லாமல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications