எரியுதுடி மாலா.. பேனை 12ஆம் நம்பர்ல வையி! கொளுத்தும் வெயில்.. எகிறும் மின் தேவை! தாங்குமா தமிழகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின்சார பயன்பாடும் அதே வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டில் கோடை ஆரம்பிக்கும் முன்பே வெப்பம் அதிகரித்துள்ளதால், தினசரி மின்நுகர்வு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 20 ஆயிரத்து 60 மெகாவாட் வரை உயர்ந்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

பொதுவாக தமிழகத்தில் சாதாரண நாட்களில் தினசரி மின்சாரத் தேவை சுமார் 16 ஆயிரம் மெகாவாட் அளவிலேயே இருக்கும். ஆனால் கோடைக்காலம் தொடங்கியதும் இந்த அளவு வேகமாக உயர்வது வழக்கமான ஒன்றாகும்.

tneb tangedco summer

கோடை வெயில் அதிகரிக்கும் காலங்களில் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்துத் துறைகளிலும் மின்சார சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. குறிப்பாக மின்விசிறிகள், குளிர்சாதன இயந்திரங்கள், குளிர்பதனப் பெட்டிகள் போன்ற சாதனங்கள் அதிக நேரம் இயக்கப்படுவதால் மின்தேவை திடீரென உயர்கிறது.

தமிழக மின்வாரியம்

இந்த ஆண்டு இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல் இருப்பதால், மக்கள் நீண்ட நேரம் குளிர்சாதன வசதிகளை பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மேலாக, சில பகுதிகளில் எரிவாயு உருளைகள் கிடைப்பதில் ஏற்பட்ட சிரமங்களும் மின்சார பயன்பாட்டை அதிகரிக்க காரணமாகியுள்ளது. பலர் சமையலுக்காக மின் அடுப்புகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், வீடுகளில் மின்சாரச் சுமை கூடிவருகிறது.

மின் நுகர்வு அதிகரிப்பு

கடந்த ஆண்டும் கோடை காலத்தில் மின்நுகர்வு அதிகரித்தது. குறிப்பாக மே மாத தொடக்கத்தில் தினசரி மின்நுகர்வு 20 ஆயிரத்து 800 மெகாவாட் அளவை கடந்ததாக பதிவாகியிருந்தது. இந்த ஆண்டும் அதேபோல் அல்லது அதைவிட அதிகமாக மின்சாரத் தேவை உருவாகும் என அதிகாரிகள் கணித்துள்ளனர். இந்நிலையில், மே மாதத்தின் தொடக்கத்தில் 'கத்திரி வெயில்' என பொதுவாக அழைக்கப்படும் கடும் வெப்ப காலம் தொடங்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்பதால், தினசரி மின்தேவை 21 ஆயிரம் முதல் 22 ஆயிரம் மெகாவாட் வரை உயரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி

மின்சார தேவையை சமாளிக்க தமிழகத்தில் பல்வேறு மூலங்களிலிருந்து மின்சார உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனல் மின்நிலையங்கள் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு கூடுதலாக மத்திய தொகுப்பிலிருந்தும் மின்சாரம் பெறப்படுகிறது. அதேபோல், சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தற்போது முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் சூரிய மின்சாரம் அதிகமாக கிடைப்பதால், மின்தேவையை சமாளிக்க உதவுகிறது.

மின்கொள்முதல்

மேலும் நீண்டகால மற்றும் நடுத்தரகால ஒப்பந்தங்களின் கீழ் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் மின்சாரம் பெறப்படுகிறது. மீதமுள்ள தேவைகளை நிறைவேற்ற குறுகியகால மின்கொள்முதல் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. தேவையான நேரங்களில் பிற மாநிலங்களிடமிருந்தும் மின்சாரம் பெறும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாலை நேரம் முதல் அதிகாலை வரை மின்தேவை அதிகரிக்கும் நேரங்களில் நீர், எரிவாயு மற்றும் காற்றாலை மின்சாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

22 ஆயிரம் மெகாவாட்

மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். தினசரி 22 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் வழங்கும் அளவுக்கு தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கோடை வெய்யிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் மின்சார பயன்பாடும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரவிருக்கும் கடும் வெப்ப காலத்தை சமாளிக்க அரசு மற்றும் மின்வாரியம் உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+