50 கிமீ வேகத்தில் சூறாவளி... உயரும் கடல் அலை... வெளுத்து வாங்கப் போகும் மழை
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம், உள்மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம், உள்மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி கரூர், திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு... விவசாய பெருங்குடி மக்கள் மகிழ்ச்சி
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு கடல் அலை 2.2 மீட்டர் முதல் 3.2 மீட்டர் வரை எழும்பக்கூடும் என்றும் வானிலை மைய எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.