"ஆளுநர்கள் ஒன்னும் சூப்பர் முதல்வர்கள் இல்லை!" உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக சொன்ன தமிழ்நாடு அரசு
சென்னை: மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்கக் காலக்கெடு நிர்ணயம் செய்தது தொடர்பாக ஜனாதிபதி குறிப்பு ஒன்றை அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்வி சில முக்கிய வாதங்களை முன்வைத்தார். ஆளுநர்கள் ஒன்றும் வரம்பற்ற அதிகாரம் கொண்ட சூப்பர் முதல்வர்கள் இல்லை என்றும் ஆளுநரால் ஒரு மசோதாவை நிறுத்தி வைக்கவோ நிராகரிக்கவோ முடியாது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடுவை நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பு அப்போதே பேசுபொருள் ஆனது. அதேநேரம் இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளைக் கொண்ட விளக்கக்குறிப்பைக் கொடுத்திருந்தார்.

ஜனாதிபதியின் விளக்கக் குறிப்பு
ஜனாதிபதியின் விளக்கக் குறிப்பு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தலைமை நீதிபதி கவாய் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது.. முதலில் இந்த வழக்கில் மத்திய அரசு தனது வாதத்தை முன்வைத்தது. அதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிரா, கோவா, மத்திய பிரதேசம் என பல்வேறு மாநிலங்களும் தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றன.
சூப்பர் சிஎம் இல்லை
அதன்படி இது தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சில முக்கிய வாதங்களை முன்வைத்தது. ஆளுநர் என்பவர் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர் இல்லை என்றும் அவர் ஒரு சூப்பர் முதலமைச்சர் இல்லை என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. மேலும், ஆளுநர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைக்கவோ அல்லது அதை நிராகரிக்கவோ முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி, "அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான மசோதாக்கள் தினசரி நிறைவேற்றப்படுகின்றன.. அவை குறித்து நீதிமன்றங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு மசோதாவை பெரும்பான்மையானவர்கள் கொண்டு வந்தாலும், நீதிமன்றங்கள் அதை ஆராயும்; இது அதிகாரப் பிரிவினையின் ஒரு பகுதி" என்றார்.
தடை இல்லை
இன்றைய தினம் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநர்களுக்கும் அரசியலமைப்புச் சட்டம் 361ன் கீழ் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்தும் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதாவது இந்தச் சட்டம் குடியரசுத் தலைவரையும் ஆளுநர்களையும் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கிறது என்றாலும், அவர்கள் எடுக்கும் முடிவுகள் குறித்து நீதித்துறை ஆய்வு செய்ய எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மூத்த வழக்கறிஞர் சிங்வி மேலும் கூறுகையில், "நீதித்துறை ஆய்வில் இருந்து ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள் விலக்கு அளிக்கப்பட்டால், அவர்களின் அதிகாரம் வரம்புகளை மீறிவிடும். இது அதிகாரப் பிரிவினைக்கு முரணாக அமைந்துவிடும்" என்றார்.
தொடரும் விசாரணை
இன்று நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிற்கும் மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்விக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. சிங்வி தனது வாதங்களின்போது, தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கும் சம்பவங்கள் நடப்பதாகக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா, "இது குறித்து நீங்க விரிவான விவாதத்திற்குத் தயார் என்றாலும் நான் பேச ரெடியாக இருக்கிறேன்" என்றார். இப்படி இன்று நாள் முழுக்க காரசார வாதம் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை நாளை தொடர்ந்து நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications