தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்.. காகர்லா உஷா நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை!
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஜூலை 16ம் தேதி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பரவியதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.
மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகளையும், நடத்த முடியாததால், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

பிளஸ் டூ தேர்வு
சட்டசபை தேர்தலுக்கு பின்னர் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தல் காலத்தில் கொரோனா வேகமாக பரவியதால், இரண்டாவது அலை ஏற்பட்டு, தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தடுப்பூசி நிலவரம்
இந்நிலையில், தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுக்கவே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்ற போதிலும், தடுப்பூசி பற்றாக்குறையும் நிலவி வருகிறது.

புதுச்சேரி திட்டம்
இந்த நிலையில்தான், புதுச்சேரியில் முதல் கட்டமாக, மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளை விரைவில் திறக்க அரசு முடிவு செய்தது. இதேபோல, பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் வரும் 16ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், முதலில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்படவுள்ளன என்றும், புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள்
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் வழியாகத்தான் நடக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஜூலை 16ம் தேதி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தீவிர ஆலோசனை
இந்த கூட்டத்தில் பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். மாணவர்கள் சேர்க்கை, இலவச பாடப்புத்தகம், மடிக்கணினி வழங்குதல், இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் சேர்ப்பது, சிறப்பு எழுத்தறிவு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications