37 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.. தற்காலிமாக வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு
சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு இடை நிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆசிரியர்கள் போராடி வந்த நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் அன்பில் மகேஸ் கோரிக்கை விடுத்து இருந்தார்.
அமைச்சர் கோரிக்கையை ஏற்றும், முதல்வர் தங்கள் கோரிக்கை ஏற்பார் என்ற நம்பிக்கை அடிப்படையிலும் போராட்டத்தை கைவிடுவதாக இடை நிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இடை நிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கினர். திமுக 2021 சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டத்தினை கையில் எடுத்தனர்.
பள்ளி அரையாண்டு விடுமுறையின் போது இந்த போராட்டத்தை தொடங்கிய இடை நிலை ஆசிரியர்கள் பள்ளிகள் திறந்தபிறகும் போராட்டத்தினை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வந்தனர். பள்ளிக் கல்வித்துறை எச்சரித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி 37வது நாளாக இன்று போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். விரைவில் மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சினை சார்ந்த முடிவு எடுக்கப்படும்.
பணிக்கு செல்லாமல் உள்ள 5,781 ஆசிரியர்களுக்கு மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:-
தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்
இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சமஊதிய போராட்டம் சார்ந்து இன்று (31-01-2026) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். அதில் மூன்று நபர்கள் ஊதிய குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்றதின் அடிப்படையிலும் நமது அரசு மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நல்லதொரு முடிவு ஏற்படும் என்று
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலன், நெடு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம் என்று உறுதி அளிக்கிறோம். என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications