பட்ஜெட்- தமிழகம் திட்டமிட்டு புறக்கணிப்பு- திமுக எம்பிக்கள் போராட்டத்துக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
சென்னை: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது; இதனைக் கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே திமுக எம்பிக்கள் கறுப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்துவர் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் தனிநாடு கோரும் நிலைமை உருவாகி இருக்கிறது என கர்நாடகா காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது.

திட்டமிட்டு புறக்கணிப்பு: இதேபோல தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகாலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார்.
ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?: 2015-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே... என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?
ஒட்டுமொத்த ஏமாற்று வேலை: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளப் புதிய திட்டங்களை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு அண்மையில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க இதுவரை எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களையே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவதாகும்.
தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய துரோகம்: மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் கடந்த மூன்றாண்டுகாலமாக சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.
பட்ஜெட் வஞ்சகம்:தென்னிந்தியா ’தனிநாடு’ கோரும் நிலைமை ஏற்படும்- கர்நாடகா காங். எம்பி பகீர் குரல்!
திமுக எம்பிக்கள் போராட்டம்: தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications